19. ஆர்த்தான்காண் அழல்நாகம் - பாடல் 10
தன்னை வணங்கும் அடியார்களுக்கு அருள்புரியும் பெருமான் என்று முந்தைய பாடலில் கூறும் அப்பர் பிரான், இங்கே, அடியார்களின் அல்லல்
பாடல் 10
அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லல் எல்லாம் அரும்பொருளாய் நின்றவன்
காண் அனங்கன் ஆகம்
மறுத்தவன் காண் மலை தன்னை மதியாது ஓடி மலைமகள் தன் மனம்
நடுங்க வானோர் அஞ்சக்
கறுத்தவனாய்க் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும்
கண்ணும் பிதுங்கி ஓட
செறுத்தவன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன்
என் சிந்தையானே
விளக்கம்
Advertisement
தன்னை வணங்கும் அடியார்களுக்கு அருள்புரியும் பெருமான் என்று முந்தைய பாடலில் கூறும் அப்பர் பிரான், இங்கே, அடியார்களின் அல்லல் தீர்த்து அருள்புரிவதாக உணர்த்துகின்றார். பதிகத்தின் ஏழாவது பாடலில், தக்க யாகத்தில் பார்வதி தேவியை இகழ்ந்த தக்கன் மீது அப்பர் பிரான் கொண்ட கோபம், பதிகத்தின் கடைப் பாடலுக்கு வந்த பின்னரும் தணியவில்லை போலும். அரக்கன் இராவணன் கயிலை மலையை அசைத்து, தேவிக்கு அச்சம் விளைத்தது அப்பர் பிரானின் நினைவுக்கு வந்தது போலும். பொதுவாக அரக்கன் இராவணன் மலையின் கீழே அகப்பட்டு வருந்தியதை குறிப்பிடும் அப்பர் பிரான், அரக்கனுக்கு பெருமான் அருள்கள் புரிந்ததையும் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இந்தப் பாடலில் மலைமகள் மனம் நடுங்க கயிலை மலையை அசைத்தவன் என்று குறிப்பிடுவதுடன் நில்லாமல், அவனது முடியும் கண்ணும் பிதுங்கச் செய்து, சிவபெருமான் அவனை வென்றார் என்று கூறுகின்றார். பெருமான் அருள்புரிந்த செய்தி இடம் பெறவில்லை. அனங்கன் = மன்மதன். நெற்றிக் அந்நாள் எரிக்கப்பட்ட பின்னர் உடலற்றவனாக மன்மதன் இருக்கும் நிலையை குறிப்பிடும் வடமொழிச் சொல்.
பொழிப்புரை
அடியார்களின் துன்பங்களை நீக்கியவனும், அடைவதற்கு அரிய அரும்பொருளாக இருப்பவனும், மன்மதனது உடலை அழித்தவனும், கயிலை மலையின் சிறப்புகளை பொருட்படுத்தாது, அந்த மலையினை அசைத்து, மலை மீது அமர்ந்திருந்த மலைமகள் நடுங்குமாறும் தேவர்கள் அஞ்சுமாறு செய்த அரக்கன் இராவணின் கைகளும், ஒளி மிகுந்த கிரீடங்கள் அணிந்த தலைகளும், கண்களும் பிதுங்கும் வகையில், அரக்கனை மலையின் கீழே அழுத்தி, அவனை வென்றவனும் ஆகிய சிவபெருமான், முண்டீச்சரம் தலத்தில் சிலலோகநாதனாக உறைகின்றார். அவர் தான் எனது சிந்தையில் நிறைந்து காணப்படுகின்றார்.
முடிவுரை
பதிகத்தின் ஏழாவது பாடலில், உமையம்மையை இழித்து பேசியதை பொறுக்காமல் தக்கனை தண்டித்ததையும், உமையம்மை அச்சம் உற மலையினை அசைத்த அரக்கன் இராவணனின் கைகளும், கண்களும், தலைகளும் நசுங்குமாறு தனது கால் பெருவிரலால் மலையை அழுத்தியதையும் குறிப்பிடுவதன் மூலம், அப்பர் பிரான், சிவபெருமான் தனது மனைவியின் உணர்ச்சிகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதையும் நமக்கு இந்தப் பதிகத்தின் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். பெண்மைக்கு தனது உடலில் ஒரு பாகத்தை அளித்து, ஆணும் பெண்ணும் சமம் என்பதை உலகுக்கு உணர்த்திய பெருமான், மனைவியின் உணர்ச்சிகளை கருத்தில்கொண்டு ஒவ்வொரு கணவனும் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்தும் விதத்தில் இந்த பதிகம் அமைந்துள்ளது. தனது சிந்தைனையில் பரவியுள்ள சிவபெருமான் என்று பாடல்தோறும் உணர்த்தும் அப்பர் பிரான், சிவபெருமானின் பல்வேறு பண்புகளையும் இயல்புகளையும் சிறப்புகளையும் விளக்கி, நாம் ஏன் அவனை எப்போதும் நினைத்து வணங்கவேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றார். அப்பர் பிரான் உணர்த்திய சிறப்புகளையும், கருத்துகளையும் மனத்தினில் கொண்டு, நாமும் நமது சிந்தைனையில் இறைவனை எப்போதும் நிறுத்துவோமாக.