பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார்.
புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று (ஏப்ரல் 12) காலமானார்.
மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலியில் 1933 ஆம் ஆண்டு செப். 8இல் பிறந்தவர் ஆஷா போஸ்லே. மாரடைப்பு, கடுமையான உடல் சோா்வு காரணமாக மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பாடகி ஆஷா போஸ்லேவின் உயிர் இன்று காலை பிரிந்தது.
ஆஷா போஸ்லேவின் மறைவுச் செய்தியை அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதி செய்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
பாடகி ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். குறிப்பாக ஹிந்தியில் காலத்தால் அழியாத பல பாடல்களையும் அவர் பாடியுள்ளார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் கலைப் பயணம் நீடித்தது.
1943 ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் வெளிவந்த மஜா பால் திரைப்படத்தில் தனது முதல் பாடலை பாடினார். பன்முகத்தன்மைக்குப் பெயா் பெற்ற அவா், காதல் பாடல்கள் தொடங்கி கஜல், துள்ளலான பாடல்கள் வரை பல மறக்க முடியாத மெல்லிசைப் பாடல்களைப் பாடியுள்ளாா். இவா் மறைந்த புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரியும், இசையமைப்பாளர் ஆர். டி. பர்மனின் மனைவியும் ஆவார்.
இந்திய இசையுலகில் இவரது சாதனைகளைப் போற்றும் விதமாக திரைப்படைத் துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதோடு, பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், பல தேசிய விருதுகள் மற்றும் ஃப்லிம்ஃபேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் பிரபலமான செண்பகமே... செண்பகமே, சந்திரமுகி படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், மீரா படத்தில் ஓ பட்டர்ஃபிளை, சேதுபதி ஐபிஎஸ், நேருக்கு நேர், புதுப்பாட்டு, நான் சொன்னதே சட்டம் உள்ளிட்ட படங்களிலும் பாடலை பாடியுள்ளார்.
திரைப்படப் பாடல்களை தவிர கவாலி, கஜல் போன்ற பாரம்பரிய இசை வடிவங்களிலும் சிறந்து விளங்கியவர். மிக அதிக பாடல்களை பதிவு செய்தவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தவர் ஆஷா போஸ்லே.
ஆஷா போஸலேவின் மறைவு திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.