20. செத்தையேன் சிதம்பன் - பாடல் 1
கல்லில் கட்டப்பட்டு நடுக்கடலில் தள்ளிவிடப்பட்ட அப்பர் பிரான், சிவபெருமானின் கருணையால் கல்லே தெப்பமாக மிதந்து அவரை கரை சேர்த்த அதிசயத்தை, காஞ்சியில் இருந்த
(கோவலூர் வீரட்டம் – நேரிசை)
முன்னுரை
கல்லில் கட்டப்பட்டு நடுக்கடலில் தள்ளிவிடப்பட்ட அப்பர் பிரான், சிவபெருமானின் கருணையால் கல்லே தெப்பமாக மிதந்து அவரை கரை சேர்த்த அதிசயத்தை, காஞ்சியில் இருந்த பல்லவ மன்னன், மகேந்திர வர்மனும் அறிந்தான். சமணர்களின் சொற்களைக் கேட்டு, அப்பர் பிரானுக்கு பல தீங்குகள் இழைத்த பின்னரும், அந்த சூழ்ச்சிகளை முறியடித்து அப்பர் பிரானை காப்பாற்றிய சிவபெருமானின் பெருமையையும் அவரது கருணைத் திறத்தினையும் உணர்ந்த பல்லவ மன்னன் அப்பர் பிரானை சந்தித்து, அவரை வணங்கி, அவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பினான். திருவதிகை நகரில் தங்கியவாறு, பதிகங்கள் பாடியும், உழவாரத் தொண்டுகள் புரிந்தும், அப்பர் பிரான் இருந்த நாட்களில், அங்கே வந்த பல்லவ மன்னன் அவரை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டான். பின்னர் சைவ மதத்தையும் சார்ந்தான். இதனை உணர்த்தும் பெரியபுராண பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
புல்லறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து
வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான்
மன்னன் மதம் மாறியதாலும், அவர்களது பல சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டதாலும், பல்லவ நாட்டில் தங்களது செல்வாக்கு மிகவும் குறையவே, சமண குருமார்கள், பாடலிபுத்திரம் (கடலூர் நகரத்தின் ஒரு பகுதி) காஞ்சிபுரம் ஆகிய இடங்களை விட்டு நீங்கி, மதுரை நகர் சென்றனர். அவர்கள் தங்கியிருந்த சமணப் பாழிகளும், சமணப் பள்ளிகளும் எவரும் வசிக்காமல் வெற்றிடங்களாக இருக்கவே, அவைகளை இடித்த பல்லவ மன்னன், அந்த கற்களைக் கொண்டு, குணபரவீச்சரம் என்ற பெயரில் சிவபெருமானுக்கு கோயில் எடுத்தான். குணபரன் என்பது மகேந்திரவர்ம பல்லவனின் சிறப்புப் பெயர்களில் ஒன்று. ஈச்சரம், ஈச்சுரம் என்று சிவபெருமானின் ஆலயங்களை அழைத்தனர். குணபரன் எடுத்த ஈச்சரம் என்பதால் குணபரவீச்சரம் என்ற பெயர் வந்தது. திருச்சி மலைக் கோட்டை, தாயுமானவர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு குடவரைக் கோயிலில் (மகேந்திர பல்லவன் எடுத்தது) குணபரன் என்று இந்த மன்னனின் பெயர் பொறிக்கப் பட்டுள்ளது. வீடுபேறு என்ற நிலையை சமண மதம் ஏற்பதில்லை. எனவே வீடு அறியா சமணர் என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுகின்றார். காடவன் என்பது பல்லவ மன்னர்களின் பொதுவான பெயர்.
வீடறியாச் சமணர் மொழி பொய் என்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின் கண் கண்ணுதற்குப்
பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்துக் கொணர்ந்து குணபரவீச்சரம் எடுத்தான்
பல நாட்கள் திருவதிகையில் தங்கியிருந்து திருப்பணிகள் செய்த அப்பர் பிரான், பின்னர் அருகிலுள்ள திருவெண்ணெய்நல்லூர், ஆமாத்தூர், கோவலூர் (தற்போதைய பெயர் திருக்கோயிலூர்) முதலான தலங்கள் சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. கோவலூர் வீரட்டம் மீது அருளிய பதிகம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. திருவெண்ணெய் நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை.
ஐந்து புலன்களில் பிடியில் அகப்பட்டு, அவற்றை அடக்கி வாழ இயலாமல் புலன்கள் செல்லும் வழியில் சென்று வாழும் வாழ்க்கையினை இகழ்ந்து பாடிய பாடல்கள் கொண்ட பதிகம். அப்பர் பிரான், சிவநெறியை பின்பற்றி வாழத் தொடங்கிய பின்னர், அவர் வாழ்ந்த தூய வாழ்க்கையினை, செய்த தொண்டுகளை நாம் அனைவரும் அறிவோம். எனவே தனது நிலையைக் குறிப்பிட்டு அவர் பாடிய பாடலாக நாம் கொள்ளக்கூடாது. தன்னைச் சுட்டிக் காட்டி மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது அப்பர் பிரானின் பாணி. அத்தகைய பதிகங்களில் இதுவும் ஒன்று.
பாடல் 1
செத்தையேன் சிதம்பன் நாயேன் செடியனேன் அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறிய மாட்டேன்
எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வது என்னே கோவல் வீரட்டனீரே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">செத்தையேன் = காய்ந்த இலைச் சருகு போன்று பயனற்றவன். சிதம்பன் = நல்ல பண்புகள் இல்லாதவன். செடியனேன் = பாவங்கள் உடையவன், குற்றங்கள் உடையவன். பொத்தை = துளைகள் உடைய உடல். கொத்தையேன் = குருடன். இங்கே அகக்கண் குருடன் என்று கொள்ள வேண்டும்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">காய்ந்த இலைச் சருகு போன்று பயனற்றவனாக, நல்ல பண்புகள் ஏதும் இல்லாதவனாக, கீழ்த்தன்மை உடையவனாக, குற்றங்களும் பாவங்களும் நிறைந்தவனாக, அழுக்குகள் பாயும் துளைகளை உடைய உடலினை போற்றி வாழ்பவனாக இந்நாள் வரை நான் வாழ்ந்து வருகின்றேன். மெய்ப் பொருளாகிய நீதான் புகலிடம் என்பதை அறியாமலும் நான் வாழ்ந்து வருகின்றேன்; இவ்வாறு உலக மாயையின் வலையில் சிக்கி வாழும் நான், வாழ்வில் எதனை பற்றுக்கோடாக பற்றி வாழ்வேன்? மனதினில் குடிகொண்டுள்ள அறியாமை எனப்படும் இருளை நீக்க இயலாமல், அகக்கண் குருடனாக நான் வாழ்ந்து வருகின்றேன். என்ன செய்து கரை ஏறுவது என்பது தெரியாமல் திகைக்கின்றேன். கோவலூர் வீரட்டத்தில் வாழும் இறைவனே நீர்தான் நான் உய்யும் வழியினை காட்டி அருள்புரிய வேண்டும்.</p>