தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்ததால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்ததால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (ஏப்ரல் 11) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை சிஎஸ்கே பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், தொடர்ச்சியான தோல்விகளால் சிஎஸ்கே வீரர்கள் சோர்வடைந்துவிட்டதாக அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் சிஎஸ்கே வீரர்கள் இருந்தனர். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்ததால் நாங்கள் சோர்வடைந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால், தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில் வீரர்கள் தெளிவாக இருந்தார்கள் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு இடங்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தது. குவாஹாட்டியில் நடைபெற்ற முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக தோல்வி, சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக தோல்வி, பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக தோல்வி என முதல் மூன்று போட்டிகளுமே சிஎஸ்கேவுக்கு சரியாக அமையவில்லை. தற்போது சென்னை சேப்பாக்கத்தில் கிடைத்திருக்கும் வெற்றி சென்னை சூப்பர் கிங்ஸின் தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கும்.
சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற கடந்த 6 போட்டிகளில் தோல்வியையே சந்தித்து வந்த சிஎஸ்கே, தில்லிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.