முகப்பு
தினம் ஒரு தேவாரம்

22. கடவுளைக் கடலுள் எழு - பாடல் 1

இந்நாளில் பெண்ணாகடம் என்று அழைக்கப்படும் தலம், பண்டைய நாளில் கடந்தை என்றும் அங்குள்ள கோயில் தூங்கானை மாடம் என்று அழைக்கப்பட்டது.

Updated On : 19 ஏப்ரல், 2016 at 12:48 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:33 PM

(அண்ணாமலை – குறுந்தொகை)

பின்னணி

இந்நாளில் பெண்ணாகடம் என்று அழைக்கப்படும் தலம், பண்டைய நாளில் கடந்தை என்றும் அங்குள்ள கோயில் தூங்கானை மாடம் என்று அழைக்கப்பட்டது. இந்த தலத்தில் உறையும் சுடர்க்கொழுந்து நாதரைப் பணிந்த அப்பர் பிரான், தனது உடலில் இலச்சினைகள் பதித்து, சமணர்களுடன் தொடர்புகொண்டிருந்த தனது உடலினைத் தூய்மையாக மாற்ற வேண்டும் என்று வேண்டினார். பெருமானும், அப்பர் பிரானின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம், மூவிலைச் சூலம் மற்றும் இடபத்தின் இலச்சினைகளை அப்பர் பிரானது தோள்களில் பொறிப்பதற்கு ஏற்பாடு செய்தார். பெருமானின் கட்டளைப் படி ஒரு பூதம், எவரும் அறியாத வண்ணம், மேற்கூறிய இரண்டு இலச்சினைகளையும், அப்பர் பிரானின் தோள்களில் பொறித்தது. இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த அப்பர் பிரான், சில நாட்கள் இந்த தலத்தில் திருத்தொண்டுகள் புரிந்தபின்னர், அருகிலிருக்கும் நெல்வாயில் அரத்துறை, மற்றும் முதுகுன்றம் ஆகிய தலங்களுக்கு சென்றார். இதனைக் குறிப்பிடும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்யப்படும் செயலையே பயிலுதல் என்று கூறுவார்கள். அப்பர் பிரான் தொடர்ந்து திருத்தொண்டு செய்தமையை உணர்த்தும் வண்ணம், சேக்கிழார் இங்கே பயின்று என்ற சொல்லினை பயன்படுத்தி உள்ளார். பொருவில் = ஒப்பற்ற. தேங்கா = தேன்+கா = தேன் நிறைந்த மலர்கள் உடைய சோலை. முகில் = மேகம்.

Advertisement

தூங்கானை மாடத்து சுடர்க் கொழுந்தின் அடி பரவிப்
பாங்காகத் திருத்தொண்டு செய்து பயின்று அமரும் நாள்
பூங்கான மணம் கமழும் பொருவில் திரு அரத்துறையும்
தேங்காவின் முகில் உறங்கும் திரு முதுகுன்றமும் பணிந்து

இந்த பதிகத்தின் முதல் பாடலில் ஒப்பாரி இலாத என்ற தொடர் மூலம் ஒப்பார் இல்லாத தலைவன் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். திருவண்டப்பகுதி திருவகவலில் மணிவாசகப் பெருமான், தன்னேர் இல்லோன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஒப்பற்ற ஒரு தலைவனாக அவன் விளங்கும் தன்மை, திருவாரூர் பதிகத்தின் ஒரு பாடலில் (6.26.4) கூறப்படுகின்றது. இந்த பாடலில் உலகங்களை படைத்தல், காத்தல், அழித்தல், அழித்த பின்னர் மீண்டும் படைத்தல் ஆகிய செயல்களை இறைவன் செய்கின்றான் என்று குறிப்பிட்டு, அழிந்த உலகம் மீண்டும் தோன்றுவதற்கு காரணமாக பெருமான் இருக்கும் நிலை உணர்த்துப்படுகின்றது. அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலான் என்று, உலக மாயையைக் கடந்த உயிர்களுக்கும் அப்பாற்பட்டவன் பெருமான் என்று இங்கே அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

மெய்ப்பால் வெண்ணீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கினுள் பதித்த சோதியானை
ஒப்பானை ஒப்பிலா ஒருவன் தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்து அகத்தே மன்னினானை
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்தவாரே

பெருமானின் திருப்பாதங்கள் ஒப்புவமை அற்றவை என்றும் உவமைகளைக் கடந்தவை என்றும் மணிவாசகர் கூறும் பாடலை (அதிசயப்பத்து பதிகம் முதல் பாடல்) நாம் இங்கே காணலாம். வைப்பு மாடு = சேமித்து வைத்த செல்வம். இறந்தன = கடந்தவை. நமது வாழ்வினில் நாம் சேமித்து வைத்த செல்வமாக உள்ளவன் சிவபெருமான் என்று நினைத்து மனம் உருகி மாணிக்கத்தின் ஒளி போன்று விளங்கும் சிவபெருமானை வழிபட வேண்டும் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார்.

வைப்பு மாடு என்றும் மாணிக்கத்து ஒளி என்றும் மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவரலியர் தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பிலாதன உவமனில் இறந்தன ஒண்மலர் திருப்பாதத்து
அப்பன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

திருவல்லம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (1.113.2) ஞானசம்பந்தர் பெருமானை தன்னொப்பில்லாத் தூயவன் என்று கூறுகினார். சேயவன் = விளங்காதவன். மூச்சினை அடக்கி தவம் மேற்கொண்டால் மட்டும் போதாது. சிவபெருமானைப் பற்றிய ஞானமும் இருந்தால் தான் சிவபெருமானை புரிந்துகொள்ள முடியும் என்று உணர்த்தும் முகமாக இங்கே அமரர்க்கும் முனிவர்க்கும் சேயவன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

தாயவன் உலகுக்குத் தன்னொப்பில்லாத்
தூயவன் தூமதி சூடி எல்லாம்
ஆயவன் அமரர்க்கு முனிவர்கட்கும்
சேயவன் உறைவிடம் திருவல்லமே

ஆரூர் அரநெறி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் ஒரு பாடலில் (6.33.6) அப்பர் பிரான், தனக்கு ஒப்பில்லாத் தலைவன் என்று பெருமானை கூறுவதை நாம் இங்கே காணலாம். எல்லாப் பொருட்களும் தோன்றுவதற்கு முன்னமே, அவற்றில் குடிகொண்டு செயல்படுத்தும் பெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

தாயவனை எவ்வுயிர்க்கும் தன்னொப்பில்லாத் தகு தில்லை நடம் பயிலும் தலைவன் தன்னை
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறிகடல் நஞ்சு உண்டுகந்த மைந்தன் தன்னை
மேயவனைப் பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம் பெருமானை எல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியில் அப்பன் தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே

சுந்தரர் ஆரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.51.5) பெருமானை ஒப்பரிய குணத்தான் என்றும் இணையிலி என்றும் கூறுகின்றார். திருமாலும் நான்முகனும் சிந்தித்தும் கண்டும் அறிந்துகொள்ள முடியாத செல்வன் என்றும் தனக்கு இணையாக எவரும் இல்லாதவன் என்றும் சுந்தரர் பெருமானை இங்கே குறிப்பிடுகின்றார்.

செப்பரிய அயனொடு மால் சிந்தித்து தெரிவரிய
அப்பெரிய திருவினையே அறியாதே அருவினையேன்
ஒப்பரிய குணத்தானை இணையிலியை அணைவின்றி
எப்பரிசு பிரிந்து இருக்கேன் என் ஆரூர் இறைவனையே

ஒப்பில்லாதவன் என்று பெருமானைப் புகழும் பாடல்களில் மிகவும் பிரசித்தமானது, திருவாசகம் - பிடித்தபத்து பதிகத்தில் உள்ள அம்மையே அப்பா என்று தொடங்கும் பாடலாகும். இந்த பாடலில் மணிவாசகர் ஒப்பிலா மணியே என்று இறைவனை அழைக்கின்றார். பெருமானிடத்தில் நாம் வைக்கும் அன்பு முதிர்ந்த நிலை அடையும்போது சிவானந்தம் விளையும். அந்த சிவானந்தத்தை ஆரமுது என்று மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார். பொய்ம்மை = பொய்யான, நிலையில்லாத பொருட்கள் நிறைந்துள்ள உலக வாழ்க்கை. சுருக்கும் = வீணாக்கும். பெருமானை நினையாமல், நிலையில்லாத உலக இன்பங்களில் வீழ்ந்து கிடக்கும் நிலையினை பொழுதினை வீணாகக் கழித்தல் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தாய் தந்தையர் தந்த உடலைக்கொண்டு வாழும் இவ்வாழ்க்கை, வினையின் வயபட்டது. இறைவன் நம்மை ஆட்கொண்டு முக்தி அளிக்கும் வாழ்க்கை, வினைத் தொகுதிகளின் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கை. அத்தகைய வாழ்வினை அளிக்கும் வல்லமை படைத்த இறைவனை அம்மை என்றும் அப்பன் என்றும் அழைக்கின்றார். அழுக்குகள் நிறைந்த, மலங்கள் சூழ்ந்த உடலினை உடைத்த தன்னை, புழுத்தலைப் புலையன் என்று மிகவும் தாழ்வாக கூறிக்கொள்வதை நாம் உணரலாம்.

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலை புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடலில் சுந்தரர் கூறியது போன்று குணத்தில் தனக்கு ஒப்பார் யாரும் இல்லாதவனாக இருப்பவன் இறைவன். உருவம் இல்லாத இறைவனை, எப்படி மற்ற பொருட்களை சுட்டிக்காட்டி உவமையாக சொல்ல முடியும். உருவம் ஏதும் இல்லாதவனாக இருந்தாலும் அடியார்களுக்கு அருள்புரிவதற்காக அவன் எடுக்கும் உருவங்களை, சான்றோர்கள் சொல்லக் கேட்டு நாம் அவனது உருவத்தினை கற்பனை செய்கின்றோம். அந்தணனாக குருந்த மரத்தின் கீழ் காட்சி அளித்த பெருமானை தெள்ளேணம் பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும் மணிவாசகர், அவனுக்கு ஒரு உருவம் இல்லை, பல உருவங்கள் உண்டு என்று உணர்த்துகின்றார். பல உருவங்கள் கொண்ட ஒருவனை, ஒரு பெயரிட்டு அழைப்பது பொருத்தமற்றது எனபதால், எண்ணற்ற நாமங்களைச் சொல்லி அவனைப் பாடுவோம் என்று கூறுகின்றார்.

திருமாலும் பன்றியாய்ச் சென்று உணரா திருவடியை
உரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

உருவம் இல்லாத இறைவனாக இருந்தாலும், அவனது உருவத்தைக் காணும் பாக்கியம் பெற்ற அருளாளர்கள் கொடுத்த குறிப்புகளைக் கொண்டு, அவனது செயல்கள் பண்புகள் உணர்த்தும் குறிப்புகளைக் கொண்டு, இறைவனுக்கு உருவம் கொடுத்து நாம் மகிழ்கின்றோம். நாம் நேரில் கண்டறியாத இறைவனின் உருவத்தை எவ்வாறு நாம் புரிந்து கொள்வது. நாம் உலக வாழ்க்கையில் காணும் பல பொருட்களை சுட்டிக் காட்டி, அப்பொருட்களின் வண்ணத்தையும், தன்மையையும் ஒத்து இறைவனின் அங்கங்கள் மற்றும் குணங்கள் உள்ளன என்று அருளாளர்கள் நமக்கு உணர்த்துகின்றனர். ஒப்பில்லாத ஒருவனை, பல ஒப்புமைகள் கூறி அப்பர் பிரான் இந்த பதிகத்தில் நமக்கு இறைவனின் தன்மையை, பண்புகளை, உருவத்தை நமக்கு உணர்த்துகின்றார். அவனுக்கு ஒப்பாராக எவரும் இல்லாத காரணத்தால், பல பொருட்களை உவமையாக சொல்கின்றார்.

அப்பர் பிரானின் அடக்கம் அனைவரும் அறிந்ததே. மிகுந்த அடக்கத்துடன், தனது குறைகளை பெரிது படுத்தியும், தனது பெருமைகளை எங்கும் எடுத்துரைக்காமலும் பாடல்கள் இயற்றிய அப்பர் பிரான், இந்த பாடலில் நாம் என்ற பன்மை விகுதி கொடுத்துத் தன்னை சிறப்பிப்பதை நாம் உணரலாம். சிவபெருமானைத் தொழுவதால், தன்னை உயர்வாக கருதி, பன்மை நிலையில் கூறிக்கொள்கின்றார். நாமும் சிவபெருமானைத் தொழுது நமது நிலையினை உயர்த்திக் கொள்ளலாம் என்பதை உணர்த்தும் வகையாக நாம் என்ற பன்மை விகுதி பயன்படுத்தினாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

பாடல் 1

கடவுளைக் கடலுள் எழு நஞ்சுண்ட
உடல் உளானை ஒப்பாரி இலாத எம்
அடலுளானை அரத்துறை மேவிய
சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே

</p><p align="JUSTIFY"><strong><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கடவுள் = சொல்லையும் உணர்வையும் கடந்தவன். நஞ்சுண்ட உடல் உள்ளவன் என்று நஞ்சுண்ட பின்னரும் இறவாமல் உயிருடன் இருந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. அடல் = தான் நினைத்தபோது வெளிப்பட்டு, தான் நினையாதபோது மறைந்திருக்கும் தன்மை. சுடர் = ஞானச்சுடர். ஒப்பாரி = ஒப்பாவர் எவரும் இல்லாத தன்மை. இறைவன் தனக்கு உவமையாக சொல்வதற்கும் எவரும் இல்லாதவன் என்று கூறும் அப்பர் பிரானின் திருத்தாண்டகப் பாடல் (6.97.10) ஒன்றினை நாம் இங்கே காண்போம். மயானத்தில் உறைபவன், நீண்ட சடையினை உடையவன் என்று நாம் சொல்லும் இறைவன், அந்த அளவில் மட்டும் நிற்பதில்லை, அவனுக்கு உவமையாக சொல்வதற்கு எவரும் இல்லை. உலகப் பொருட்களில் அவன் ஒருவன் அல்லன்; எந்த ஒரு ஊருக்கும் உரியவனல்லன். அனைத்து ஊர்களுக்கும் உரிமையானவன்; எந்த பொருளும் அவனுக்கு உவமையாக இல்லாதவன், அவனது திருவருளைக் கண்ணாகக் கொண்டு, நாம் அவனைக் கண்டாலும், அவன் இந்நிறத்தன், இந்த தன்மையன், இந்த உருவத்தில் இருப்பவன் என்று நம்மால் எழுதிக் காட்ட முடியாது என்று இந்த பாடலில் அப்பர் பிரான் சொல்கின்றார்.</p><p align="JUSTIFY">மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னில் அல்லான்</p><p align="JUSTIFY">ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன் ஒரூரன் அல்லன் ஓர் உவமனில்லி</p><p align="JUSTIFY">அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்</p><p align="JUSTIFY">இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">சொற்களையும் உணர்ச்சிகளையும் கடந்தவனை, பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டபின்னரும் உடல் அழியாமல் இருந்தவனை, தனக்கு ஒப்பாகச் சொல்வதற்கு எவரும் இல்லாதவனை, தான் நினைத்தபோது வெளிப்பட்டு தான் நினையாதபோது மறைந்துநிற்கும் வல்லமை படைத்தவனை, அரத்துறை தலத்தில் உறைபவனை, ஞானச்சுடராக விளங்குபவனை, காணுங்கள். அவனைத் தான் நாம் தொழுகின்றோம்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.