முகப்பு
தினம் ஒரு தேவாரம்

47. தோடுலா மலர்கள் தூவி - பாடல் 3

காவல் சுவர் ஏதும் அற்ற வெட்டவெளியில்

Updated On : 21 டிசம்பர், 2016 at 5:44 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:27 AM

அரண் இலா வெளிய நாவல் அரு நிழலாக ஈசன்
வரணியல் ஆகித் தன் வாய் நூலினால் பந்தர் செய்ய
முரண் இலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்னனாக்கித்
தரணி தான் ஆளவைத்தார் சாய்க்காடு மேவினாரே
 

விளக்கம்

அரண் = காவல் மதில். வெளிய நாவல் = வெளியே வளர்ந்த நாவல் மரம். அருநிழல் = குறுகிய நிழல். வரணியல் = சூழ்தல். தரணி = உலகம்.
திருவானைக்கா தலத்தில் கோயில் கட்டப்படுவதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி. வெட்டவெளியில், நாவல் மரத்தடியில் இருந்த இலிங்கம் என்பதால்தான், சிலந்தி இறைவனுக்கு பந்தல் அமைக்க விருப்பம் கொண்டது. அடுத்த பிறவியில் சோழ மன்னனாக பிறந்த சிலந்தி, கட்டிய கோயில்தான் இப்போது நாம் காணும் கோயில். இந்த திருக்கோயிலின் பல சுற்றுக்களும், மதிற்சுவர்களும் வேறுவேறு காலங்களில் கட்டப்பட்டவை என்று தெரியவருகின்றது.

Advertisement

பொழிப்புரை

காவல் சுவர் ஏதும் அற்ற வெட்டவெளியில் வளர்ந்த வெண்ணாவல் மரத்தின் கீழே, அதன் குறுகிய நிழலில் அமர்ந்திருந்த இறைவனின் மேனியின் மேல் மரத்தின் இலைகளும் தழைகளும் படுவதை தடுக்கும் வகையில், சிலந்தி நாவல் மரத்தினைச் சுற்றி, தனது வாயில் இருந்து வரும் நூலினைக் கொண்டு ஒரு பந்தல் போன்று அமைத்தது. இவ்வாறு தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் எந்த விதமான முரண்பாடும் இல்லாமல், சிலந்தி செய்த தொண்டினுக்கு பரிசாக, அந்த சிலந்தியை அடுத்த பிறவியில் முடிசூடும் மன்னனாக்கி, உலகை ஆளுமாறுச் செய்தவர் சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபிரான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.