முகப்பு
தினம் ஒரு தேவாரம்

47. தோடுலா மலர்கள் தூவி - பாடல் 5

தக்கன் நடத்திய வேள்வியில் பங்கு கொண்டு

Updated On : 21 டிசம்பர், 2016 at 5:46 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:27 AM

இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு
மந்திரம் மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற்கு அருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே

விளக்கம்

தந்திரம் = செய்யவேண்டியது மற்றும் செய்யத் தகாததை உணரும் அறிவு. தந்திரம் - வேதம் மற்றும் நீதி நூல்கள். எண்வகை வசுக்கள் = அட்ட வசுக்கள், அநலன், அநிலன், ஆபன், சோமன், தரன், துருவன், ப்ரத்தியூடன், பிரவாசன் ஆகிய எண்மர். தக்கனது செல்வாக்கு காரணமாக, தேவர்களும், வசுக்களும் அவன் நடத்திய யாகத்திற்கு சென்று வாழ்த்தியது இங்கே குறிப்பிடப்படுகின்றது. பிரமன் முதலியோர் வாழ்த்தியபோதும், சிவபெருமானின் அருள் இல்லாத காரணத்தால், அவர்களது வாழ்த்துரைகள், சிவபிரானது வீரத்தால் வெற்றுரைகளாக மாறியது வரலாறு. இந்த நிகழ்ச்சி கந்த புராணத்தில் மிகவும் விரிவாக சொல்லப்படுகின்றது. மணிவாசகர் அருளிய திருவுந்தியார் பதிகத்தில் இந்த நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் பல பாடல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

தக்கன் நடத்திய வேள்வியில் பங்கு கொண்டு அவிர்பாகம் பெற்ற சந்திரனை, வீரபத்திரர் தனது காலால் தேய்த்ததாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு காலால் தேய்க்கப்பட்டதால், சந்திரன் தூய்மை அடைந்தான் என்று மணிவாசகர் தோள் நோக்கம் பதிகத்தில் கூறுகின்றார். இவ்வாறு தூய்மை பெற்றதால்தான் சந்திரன் பின்னர், சிவபெருமான் தலையில் அமரும் பேறு பெற்றானோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. செய்த சிவ அபராதத்திற்கு, தண்டனை அளிப்பதே அவர்களைத் தூய்மை செய்வதற்குத் தான் இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. இந்த பாடலில், மன்மதன், கூற்றுவன், சூரியன், சரஸ்வதி, பிரமன், சந்திரன், தக்கன், தக்கனது வேள்வியை நடத்திய வேள்வித் தலைவன், என்று சிவ அபராதம் புரிந்த பலர்களின் பெயர்கள் பட்டியல் இடப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டவர்களில், மன்மதன் மற்றும் கூற்றுவன் தவிர்த்த மற்ற அனைவரும் சிவ அபராதம் புரிந்தது, தக்கன் செய்த வேள்வியுடன் தொடர்பு கொண்டது.

காமன் உடல் உயிர் காலன் பல் கதிரோன்
நாமகள் நாசி சிரம் பிரமன் கரம் எரியை
சோமன் கலை தலை தக்கனையும் எச்சனையும்
தூய்மைகள் செய்தவா தோள் நோக்கம் ஆடாமோ

பொழிப்புரை

இந்திரன், பிரமன், அக்னி, எண்வகை வசுக்கள், மற்றும் பல தேவர்கள் வேத மந்திரங்களை ஓதி, தக்கனை வாழ்த்தியபோதும், அந்த வாழ்த்துக்கள் பலன் ஏதும் அளிக்கவில்லை. செய்யவேண்டியது என்ன, செய்யத்தகாதது என்ன என்பதனை உணர்ந்துகொள்ளாமல், சிவபிரானை புறக்கணித்து, அவரை நிந்தனை செய்து நடத்தப்பட்ட வேள்வியினை அழித்து, அந்த தக்கனால் சந்திரனுக்கு விதிக்கப்பட்ட சாபத்தை மாற்றி அருள் புரிந்தவர், சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.