முகப்பு
தினம் ஒரு தேவாரம்

19. ஆர்த்தான்காண் அழல்நாகம் - பாடல் 1

திருவதிகையில் பல நாட்கள் தங்கியிருந்து பெருமானைப் போற்றி பல பதிகங்கள் பாடிய அப்பர் பிரான், பல தலங்களுக்கும் சென்று பெருமானுக்கு தமிழ்ப் பாமாலைகள் சூட்ட விரும்பினார்.

Updated On : 26 மார்ச், 2016 at 11:21 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:22 PM


(முண்டீச்சரம் – திருத்தாண்டகம்)

முன்னுரை

திருவதிகையில் பல நாட்கள் தங்கியிருந்து பெருமானைப் போற்றி பல பதிகங்கள் பாடிய அப்பர் பிரான், பல தலங்களுக்கும் சென்று பெருமானுக்கு தமிழ்ப் பாமாலைகள் சூட்ட விரும்பினார். திருவதிகைக்கு மிகவும் அருகில் இருந்த திருவெண்ணெய்நல்லூர், ஆமாத்தூர், திருக்கோவலூர் தலங்கள் வழியாக பெண்ணாகடம் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். முண்டீச்சரம் சென்றதாக சேக்கிழார் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த பாடலில் மருவி திருப்பதி பிறவும் என்ற உணர்த்தும் குறிப்பு முண்டீச்சரம் உள்ளிட்டு பல தலங்கள் சென்றதை குறிப்பிடுவதாக நாம் கொள்ள வேண்டும். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், முண்டீச்சரத்தில் உறையும் பெருமான் தனது சிந்தையில் எப்போதும் நிறைந்து இருப்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த தலத்து இறைவனின் திருநாமம் சிவலோகநாதர். இந்த பெயரினை அப்பர் பிரான் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், சிவலோகன் என்று குறிக்கின்றார். இந்த தலத்தின் மீது அருளப்பட்ட தேவாரப் பதிகங்களில் இந்த ஒரு பதிகம் தான் நமக்கு கிடைத்துள்ளது. .

திருவதிகைப் பதி மருங்கு திருவெண்ணெய் நல்லூரும்
அருளு திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத்தமிழ் பாடிப்
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார்

Advertisement

பாடல் 1

ஆர்த்தான் காண் அழல் நாகம் அரைக்கு நாணா அடியவர்கட்கு
                              அன்பன் காண் ஆனைத் தோலைப்
போர்த்தான் காண் புரிசடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில்
                                     ஆடல் புரிந்தான் தான் காண்
காத்தான் காண் உலகேழும் கலங்கா வண்ணம் கனைகடல் வாய்
                                    நஞ்சு அதனைக் கண்டத்துள்ளே
சேர்த்தான் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன்
                                                என் சிந்தையானே

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">ஆர்த்தல் = கட்டுதல். அழல் = சினம், கோபம். புறங்காடு = ஊருக்கு வெளியே அமைந்துள்ள சுடுகாடு. கனை கடல் = அலைகள் இடைவிடாது ஒலிக்கும் கடல்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">கடுஞ்சினத்தைத் தனது இயல்பாக கொண்டுள்ள பாம்பினைத் தனது இடுப்பினில் அரை நாணாக கட்டியவனும், தனது அடியவர்கள் பால் அன்பு கொண்டவனும், ஆனையைக் கொன்று அதன் தோலினைத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்தவனும், தனது முறுக்குண்ட சடையின் மேல் கங்கை நதியை ஏற்றவனும், ஊருக்கு புறம்பாக அமைந்திருக்கும் சுடுகாட்டில் ஆடல் புரிபவனும், ஏழு உலகங்களும் கலக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டு, இடைவிடாது ஒலிக்கும் அலைகள் உடைய கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டு, அந்த நஞ்சினைத் தனது கழுத்தினில் அடக்கியவனும் ஆகிய இறைவன் முண்டீச்சரம் தலத்தில் சிவலோகனாக உறைகின்றான். அந்த சிவன் தான், எனது சிந்தையில் எப்போதும் உறைகின்றான்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.