ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?
ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுக வழியிலும் நடந்ததாக வெளியான தகவல் குறித்து...
பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கான நேரடி சந்திப்பு நடைபெறுவதற்கு முன்னர் பாகிஸ்தான் பிரதிநிதிகள் மூலம் மறைமுகவழியிலும் நடைபெற்றதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கியது. தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.8) அதிகாலையில் அறிவித்தார்.
இந்தப் போரை முழுமையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி ஈரான் மற்றும் அமெரிக்க குழுக்களை பாகிஸ்தான் வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, சனிக்கிழமை (ஏப்.11) பேச்சுவார்த்தை தாமதமாகத் தொடங்கியது.
Advertisement
சுமார் 21 மணிநேரம் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும் என பாகிஸ்தான் அறிவித்தது.
இந்த நிலையில், நேரடியாக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னர், அமெரிக்க - ஈரான் தூதுக் குழுக்களுடன் முதலில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தனித்தனியே சனிக்கிழமை (ஏப்.11) கலந்துரையாடினார். அதன்பிறகு, பாகிஸ்தான் பிரதிநிதிகள் மூலம் அமெரிக்க - ஈரான் இடையே பேச்சுவார்த்தை தொடரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. பாகிஸ்தான் அதிகாரிகள் முன்னிலையில் சுமார் இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தன.
மேலும், இந்த கருத்துப் பரிமாற்றங்கள் நள்ளிரவு வரையிலும் தொடர்ந்தன.
அமெரிக்காவின் தூதுக்குழுவிற்கு அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸும் ஈரான் தூதுக்குழுவிற்கு அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பகோ் கலிபாஃப் ஆகியோரும் தலைமை வகித்தனர்.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் முடிவு எட்டப்படாததால் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு ஒப்பந்தமும் இன்றி தோல்வியடைந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அறிவித்தார்.