முகப்பு
தினம் ஒரு தேவாரம்

41. பிறவாதே தோன்றிய பெம்மான் - பாடல் 10

பெருமானின் பெருமை வாய்ந்த குணங்களை

Updated On : 26 அக்டோபர், 2016 at 5:50 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:03 AM

இகழுமாறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய்
                                                                                      நின்றான் தன்னை
நகழ மால் வரைக் கீழ் இட்டு அரக்கர் கோனை நலன் அழித்து
                                                          நன்கருளிச் செய்தான் தன்னைத்
திகழுமா மத கரியின் உரி போர்த்தானைத் திருப்புன்கூர் மேவிய
                                                                                                   சிவலோகனை
நிகழுமா வல்லானை நீடூரானை நீதனேன் என்னே நான்
                                                                                              நினையாவாறே

விளக்கம்

இகழாது பரந்து = எந்த பொருளையும் எந்த உயிரினையும் புறக்கணிக்காமல், அவற்றுடன் பெருமான் இருக்கும் நிலை. நகழ = வருந்த. நிகழுமா வல்லான் = தன்வயத்தன், தனது விருப்பப்படியே எந்த செயலையும் செய்ய வல்லவன்.

Advertisement

பொழிப்புரை

எந்த உயிரையும் எந்த பொருளையும் எப்போதும் இகழ்ந்து புறக்கணிக்காது அனைத்துப் பொருட்களிலும், அனைத்து உயிர்களிலும் கலந்து உடன் இருக்கும் சிவபெருமானை, நெஞ்சமே, நீ இகழ்ந்தது தகுமா. கயிலை மலையினை பேர்த்தேடுக்க முயற்சி செய்த அரக்கன் ராவணன் வருந்துமாறு அவனை மலையின் கீழே அழுத்தி வருத்தி அவனது வலிமையை குலைத்த பெருமான், பின்னர் அவன் சாமகானம் இசைத்துப் பாட, அவனுக்கு நீண்ட வாழ்நாளும் வாளும் வழங்கினான். மதம் திகழ்ந்து விளங்கிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவன் சிவபெருமான். இத்தகைய வீரச் செயல்களைப் புரிந்தவனாகிய, திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவலோகனும், தனது விருப்பப் படியே எந்தவொரு செயலையும் செய்ய வல்லவனும், நீடூர் தலத்து இறைவனும் ஆகிய பெருமானை, கீழ்க்குணம் கொண்ட நான் நினையாமல் இருந்தது அறிவீனம் ஆகும்.

முடிவுரை

பெருமானின் பெருமை வாய்ந்த குணங்களை பதிகத்தின் முதல் பாடலில் கூறிய அப்பர் பிரான், அத்தகைய பெருமை வாய்ந்தவன் மிகவும் எளியனாக, அளவு கடந்த வகையில் அடியார்களுக்கு அருள் புரியும் கருணையினை அடுத்த பாடலில் உணர்த்துகின்றார். பதிகத்தின் முதல் எட்டு பாடல்களில் அவனது கருணைத் திறத்தினை நமக்கு உணர்த்தும் அப்பர் பிரான், ஒன்பதாவது பாடலில் பெருமானின் கருணையால்தான், தான் சமணசமய வலையிலிருந்து விடுபட முடிந்தது என்பதை தெரிவிக்கின்றார். எனவே, இவ்வாறு கருணை புரியும் இறைவனை, நாம் இகழாமல் புகழ்ந்து பாடி அவனது அருள் பெற்று உய்ய வேண்டும் என்பதை கடைப்பாடலில் அறிவுரையாக நமக்கு கூறுகின்றார். அப்பர் பிரான் காட்டிய வழியில் சென்று, பெருமானை புகழ்ந்து பாடி, அவனது அருளினை நாம் பெறுவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.