முகப்பு
தினம் ஒரு தேவாரம்

39. வெள்ளெருக்கு அரவம் - பாடல் 8

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின்

Updated On : 12 அக்டோபர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM


பாடல் 8

    உள்ளம் உள்கி உகந்து சிவனென்று
    மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே
    புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர்
    வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே

விளக்கம்

புள்ளினார் என்று சம்பாதி மற்றும் சடாயு வழிபட்ட செய்தி இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. பரபரப்பு நீங்கிய மனத்துடன் இறைவனைத் தொழ வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த கருத்து பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. மனம் ஒரு பொருளினை நினைக்கும் போதே அடுத்த பொருளுக்கு மிகவும் வேகமாக தாவக்கூடியது. அதனால்தான் மனோவேகம் என்பது காற்றின் வேகத்தை விடவும் அதிகமானது என்று கூறுவார்கள். இந்த வேகத்தைக் கட்டுப்படுத்த, நமக்கு இறைவனைப் பற்றிய நினைவுகள் உதவும். அதனால்தான் வேகம் கெடுத்தாண்ட வேந்தன் என்று மணிவாசகர் திருவாசகம் சிவபுராணத்தில் கூறுகின்றார்.

Advertisement

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில், திருஞானசம்பந்தர் மனதினில் பரபரப்பு ஏதுமின்றி பெருமானைத் தொழ வேண்டும் என்று கூறுகின்றார். இறைவனின் திருநாமத்தை எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதை இந்த பாடலில் நமக்கு சம்பந்தர் அறிவுறுத்துகின்றார். மனதினில் பரபரப்பு ஏதுமின்றி, ஒன்றிய நிலையில், கடுமையான சொற்களைத் தவிர்த்து, தூய்மையான மனத்துடன், காமம் குரோதம் மோகம் லோபம் மதம் மாற்சரியம் ஆகிய கொடிய குணங்களைத் தவிர்த்து, மிகவும் நல்ல முறையில் இறைவனது திருநாமத்தைச் சொல்லும் அடியார்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு இறைவன் அருள் புரிவார் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

     ஒல்லையாறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து வெய்ய
    சொல்லை ஆறித் தூய்மை செய்து காமவினை அகற்றி
    நல்லவாறே உந்தன் நாமம் நாவில் நவின்றேத்த
    வல்லவாறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே

திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் ஒரு பாடலில் மணிவாசகர், மனதினில் பரபரப்பினை அடக்கி, சிந்தனையை ஒருமுகப் படுத்தி, இறைவனை தியானிக்கும் அடியார்கள், மூன்று மலங்களால் ஏற்படும் பந்தங்களை அறுக்க வல்லவர்கள் என்று கூறுகின்றார். பப்பு என்ற சொல் பரப்பு என்ற சொல்லின் இடைக்குறை. பந்தங்களை அறுக்க இயலாமல் இருக்கும் பல மானிடர்கள் தங்களைப் பெண்களாக பாவித்துக் கொண்டு, தங்கள் தலைவனான சிவபெருமானைச் சேரவேண்டும் என்ற கோரிக்கையுடன் வணங்குகின்றார்கள் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பொழிப்புரை
மனதினில் மீண்டும் மீண்டும் சிவபெருமானை நினைத்து, அமைதியான மனத்துடன் பரபரப்பினை முற்றிலும் நீக்கி பெருமானை நினைத்து வழிபடும் அடியார்களின் வினைகள் கெடுவது உண்மையாகும். எனவே சடாயு மற்றும் சம்பாதி ஆகிய கழுகுகள் தொழுது வணங்கிய புள்ளிருக்குவேளூர் இறைவனின் திருப்பதங்களை வணங்கித் தொழுவீர்களாக. வள்ளலாகிய அவர் நீங்கள் வேண்டுவதை உங்களுக்கு அளித்து அருளுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.