முகப்பு
தினம் ஒரு தேவாரம்

39. வெள்ளெருக்கு அரவம் - பாடல் 10

இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடல்

Updated On : 13 அக்டோபர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:57 PM

பாடல் 10

    அரக்கனார் தலை பத்தும் அழிதர
    நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
    பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர்
    விருப்பினால் தொழுவார் வினை வீடுமே

விளக்கம்
இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற, ஆர் என்ற விகுதி கொடுக்கப்பட்டு அரக்கனார் என்று ராவணனை அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

Advertisement

பொழிப்புரை
அரக்கன் ராவணனின் பத்து தலைகளும் அழியும் வகையில், தனது மலர் போன்ற திருவடியின் விரலை ஊன்றி நெருக்கிய சிவபெருமான் கயிலாய மலையின் தலைவராக விளங்குகின்றார். அவர் உறையும் புள்ளிருக்குவேளூர் தலத்தினை விருப்பத்துடன் தொழும் அடியார்களின் வினைகள் முற்றிலும் அழிந்துவிடும்.

முடிவுரை
இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடல் சிதைந்துவிட்டது. சிவபெருமான் குறித்த நினைவுகளை மனதில் கொள்ளும் உணர்ச்சியற்றவர்கள் நரகக்குழியில் வீழ்வார்கள் என்று முதல் பாடலில் கூறும் அப்பர் பிரான், பதிகத்தின் இரண்டாவது பாடலில், நமது உயிர் உடலினை விட்டு பிரியும் சமயத்தில், நாம் எதிர்கொள்ள இருக்கும் காலனின் சீற்றத்தை எவ்வாறு தவிர்ப்பது என்று சொல்லிக் கொடுக்கின்றார். பதிகத்தின் மூன்றாவது பாடலில், புள்ளிருக்குவேளூர் இறைவனை நினைப்பவர் மனம் குளிரும் என்றும், அவரைப் புகழ்ந்து பாடும் அடியார்களுக்கு இடர்கள் ஏதும் இல்லை என்று நான்காவது பாடலிலும், அவரை வாழ்த்தும் அடியார்களுக்கு இன்பமே விளையும் என்று ஐந்தாவது பாடலிலும், அவரது திருவடிகளைப் பற்றும் அடியார்களின் பாவங்கள் கெட்டுப்போகும் என்றும், எட்டாவது மற்றும் பத்தாவது பாடலில் உள்ளம் உள்கி பெருமானைத் தொழும் அடியார்களின் வினைகள் கெடுவது உண்மை என்றும் சொல்லும் அப்பர் பெருமான், நமது உடலில் உயிர் இருக்கும்போதே, நீலகண்டனை வாழ்த்தி உய்யுமாறு பதிகத்தின் ஏழாவது பாடலில் உணர்த்துகின்றார். அப்பர் பிரானின் அறிவுரைகளை பின்பற்றி நாமும் வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.