முகப்பு
தினம் ஒரு தேவாரம்

40. ஆண்டானை அடியேனை - பாடல் 4

இருள் நிறைந்து கிடந்த எனது உள்ளத்தின்

Updated On : 15 அக்டோபர், 2016 at 4:50 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:57 PM

பாடல் 4

இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்யத்
தெருளாத சிந்தை தனை தெருட்டித் தன் போல் சிவலோக நெறி அறியச் சிந்தை தந்த
அருளானை ஆதி மாதவத்து உளானை ஆறங்கம் நால்வேதத்து அப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே


விளக்கம்

அனைத்து உயிர்களும், அதற்கு முன்னர் பல பிறவிகளில் சேர்த்து வைத்த நல்வினை தீவினைகளின் ஒரு பகுதியை, இந்த பிறப்பில் அனுபவித்து கழிக்கின்றன. நல்வினையை புண்ணியம் என்றும் தீவினை பாவம் என்றும் நாம் கூறுகின்றோம். இவ்வாறு பிறவிகள் பாவ புண்ணியத்தால் கட்டுண்டு இருக்கும் நிலையினை, மணிவாசகர் அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டுண்டு என்று சிவபுராணத்தில் கூறுகின்றார். இந்த பாடலில் அப்பர் பெருமான் இடர் பாவம் என்று, நமக்கு வரும் துன்பங்களையும், அந்த துன்பங்களுக்கு காரணமான தீயவினைகளையும் குறிப்பிடுகின்றார். கொடிய சூலை நோயினால் தான் அடைந்த துன்பங்களை, தனது தீயவினைகளின் பயனாக அப்பர் பிரான் கருதுவதை நாம் உணரலாம். அறிவில் ஏழையாக இருந்த தன்னை, ஏழையேன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

தனது இளைய வயதினில் அடுத்தடுத்த வந்த இழப்புகளால், வாழ்க்கையில் பற்று ஏதும் இன்றி வாழ்ந்த மருள்நீக்கியார் (அப்பர் பிரானின் இயற்பெயர்) நல்ல நெறியினை தெரிந்துகொள்வதற்காக சமண சமயம் சார்ந்தவர், அங்கே தனது சிந்தை தெளிவடையவில்லை என்பதை இந்த பாடல் மூலம் நமக்கு தெரிவிக்கின்றார். ஆதிமா தவத்துள்ளான் என்று தவம் என்பதை முதன்முதலில் செய்து அடுத்தவர்களுக்கு வழி காட்டியவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். தவம் செய்யும் பல முனிவர்கள் சடை வளர்த்தார்கள் என்பதை நாம் அறிகின்றோம். ஆனால் எனது முனிவரும் சடையை உடையவன் என்ற பொருள்பட சடையான் என்று அழைக்கப்படவில்லை. உபநிடதங்களும் முனிவர்களுக்குள் பெரிய முனிவன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றது. எனவே சிவபெருமான் ஒருவனுக்கே சடையான் என்ற பெயர் பொருந்துகின்றது.

Advertisement

பொழிப்புரை

இருள் நிறைந்து கிடந்த எனது உள்ளத்தின் இருளை நீக்கி, எனது தீயவினைகளின் பயனாக எனக்குற்ற துன்பங்களைக் களைந்து, அறிவினில் ஏழையாக தெளிவற்ற சிந்தனையுடன் திரிந்த எனது சிந்தனையை தெளிவடைய வைத்து நான் உய்யும் வழியினை எனக்கு உணர்த்தியவன் சிவபெருமான். சிவலோகத்தின் நெறியினை தான் அறிந்தவாறு, நானும் அறிவதற்கு கருணை புரிந்தவன் சிவபெருமான். நால் வேதங்கள் மற்றும் வேதங்களின் பகுதியான ஆறு அங்கங்கள் ஆகியவற்றைக் கடந்த பொருளாக இருப்பவன் சிவபெருமான். இத்தகைய பெருமை வாய்ந்த குணங்களை உடைய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.