41. பிறவாதே தோன்றிய பெம்மான் - பாடல் 7
கங்கை நதியினை, தனது சடையில் மகுடம்
உரையார் பொருளுக்கு உலப்பிலானை ஒழியாமே எவ்வுருவும்
ஆனான் தன்னை
புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானைப் புதியனவுமாய் மிகவும்
பழையான் தன்னைத்
திரையார் புனல்சேர் மகுடத்தானைத் திருப்புன்கூர் மேவிய
சிவலோகனை
நிரையார் மணிமாட நீடூரானை நீதனேன் என்னே நான்
நினையாவாறே
விளக்கம்
புரை = இலகுவானது. கனம் = வலியது. உலப்பிலாமை = முடிவு பெறாத தன்மை. உரை ஆர் பொருள் = உரைக்கும் சொற்கள் உணர்த்தும் பொருள். சொற்களைக் கடந்தவன் என்று பல தேவாரப் பாடல்களில் பெருமானின் புகழ் உணர்த்தப்படுகின்றது. சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில் திருஞானசம்பந்தர், பெருமானின் புகழினைச் சொல்லப் புகுந்த வேதங்கள், அவன் முழுதுமாக புகழினைச் சொல்வதற்கு சொற்கள் போதாமையால், அவனது புகழின் ஒரு பகுதியினை சொல்லியது போலும் என்று கூறுகின்றார்.
Advertisement
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன் தன்
தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழி ஓரார்
சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சிலவல போலும் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே
பொழிப்புரை
உரைக்கும் சொற்கள் உணர்த்தும் பொருட்களுக்கு அப்பாற்பட்டவன் சிவபெருமான். உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும், ஒரு உயிரினையும் விடாது, கலந்து அந்த உருவத்தினின்று நீங்காமல் இருப்பவன் சிவபெருமான். நீரினில் மூழ்காதவாறு மிகவும் குறைந்த எடையுடன் இருக்கும் பொருளாகவும், நீரினில் மூழ்கும் எடை அதிகமான பொருளாகவும், அனைத்துப் பொருட்களுக்கும் பழமையானவனாகவும், அனைத்துப் பொருட்களையும் கடந்து நிற்கும் தன்மையால் மிகவும் புதுமையான பொருளாகவும் இருப்பவன் சிவபெருமான். அலைகள் நிறைந்த கங்கை நதியினை, தனது சடையில் மகுடம் போன்று சூடியவனும், திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவலோகனும், அழகிய மாட வீடுகளைக் கொண்ட நீடூர் தலத்து இறைவனும் ஆகிய இறைவனை, கீழ்க்குணம் கொண்ட நான் நினையாமல் இருந்தது அறிவீனம் ஆகும்.