58. தளரும் கோளரவத்தொடு - பாடல் 6
தங்களது குணங்களை பெருமையாக
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடையார் எலாம்
வணங்கி வான்மலர் கொண்டு அடி வைகலும்
கணங்கள் போற்றி இசைக்கும் கரக் கோயிலே
விளக்கம்
தங்களது குணங்களை பெருமையாக பேசிக்கொண்டு, அடுத்தவரின் குற்றங்களை சுட்டிக்காட்டுவது இழிந்தொர்களின் செயல். ஆனால் பெருமானிடம் அன்புடைய அடியார்கள், அடுத்தவர்களின் உயர்ந்த குணங்களைப் போற்றியும் தங்களது குறைகளை வெளிப்படுத்தியும் பேசி, பெருமானை வணங்குவார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வான்மலர் = சிறந்த மலர்கள். குணங்கள் என்பதை இறைவனுடன் இணைத்து, இறைவனின் அருங்குணங்களைச் சொல்லியவாறு வழிபடும் அடியார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
Advertisement
பொழிப்புரை
பெருமானிடம் அன்புகொண்டு விளங்கும் அடியார்கள், மற்ற மெய்யடியார்களின் உயர்ந்த குணங்களை போற்றிப் பேசுவதுடன், தங்களது குற்றங்களையும் தெரிவித்தவாறு தங்களது குறைகளை நீக்கவேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டியவாறு, அவரை வணங்கி வாழ்த்துவார்கள். மற்ற அடியார்களின் உயர்ந்த குணங்களை குறிப்பிடுவதன் மூலம், அத்தகைய குணங்கள் தமக்கும் அமைய வேண்டும் என்ற தங்கள் அவாவினையும் இறைவனிடம் வெளிப்படுத்தி அடியார்கள் வேண்டுகின்றார்கள். மேலும் அந்த அடியார்கள் சிறந்த மலர்களைக் கொண்டு கடம்பூர் கரக்கோயில் பெருமானின் திருவடிகளில் தூவி, தினமும் வணங்க, பூத கணங்கள் பெருமானைப் போற்றி இசைப் பாடல்கள் பாடுகின்றன.