70. நம்பனை நால்வேதம் - பாடல் 6
ஓடிவந்த கங்கை நதி
பாடல் 6:
ஏற்றானை எண்தோள் உடையான் தன்னை
எல்லி நடமாட வல்லான் தன்னைக்
கூற்றானைக் கூற்றம் உதைத்தான் தன்னைக்
குரைகடல் வாய் நஞ்சு உண்ட கண்டன் தன்னை
நீற்றானை நீளரவு ஒன்று ஆர்த்தான் தன்னை
நீண்ட சடைமுடி மேல் நீரார் கங்கை
ஆற்றானை ஆவடு தண்துறையுள் மேய அரன்
அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே
விளக்கம்:
Advertisement
எல்லி = இரவு, இங்கே பேரிரவாகிய ஊழிக் காலத்து இருளினைக் குறிக்கும்; நீரார் கங்கை = மிகுந்த வெள்ளப் பெருக்குடன் ஓடிவந்த கங்கை நதி.
பொழிப்புரை:
ஏற்றினை வாகனமாக உடையவனை, எட்டு தோள்கள் உடையவனை, பேரிரவாகிய ஊழிக் காலத்து இருளிலும் கூத்து நிகழ்த்தும் திறமை உடையவனை, கூற்றுவனுக்கு கூற்றுவனாக விளங்கி அவனை உதைத்தவனை, அலைகள் எப்போதும் ஆரவாரம் செய்து ஒலி எழுப்பிய வண்ணமாக இருக்கும் கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினை உண்டு தனது கண்டத்தில் அடக்கியவனும், உடலெங்கும் திருநீறு பூசியவனும், நீண்ட பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக அணிந்தவனும், வெள்ளமாக பொங்கி பெருகி வந்த கங்கை நதியைத் தனது நீண்ட சடைமுடியில் ஏற்றவனை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன்.