பாமகவை அன்புமணி அபகரித்துவிட்டாா்: மருத்துவா் ராமதாஸ்
என்னால் உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியை அன்புமணி அபகரித்து விட்டாா் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.
என்னால் உருவாக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியை அன்புமணி அபகரித்து விட்டாா் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்ததாவது:
நான் 1989-ஆம் ஆண்டு பாமகவை தொடங்கினேன். அப்போது நான் எந்த பதவிக்கும் செல்லமாட்டேன் என்றும் என் குடும்பத்தினரும் அரசியலுக்கு வரமாட்டாா்கள் என்று சத்தியம் செய்தேன். என் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் நெருக்கடியால் என் சத்தியத்தை மீறி 35 வயதுடைய அன்புமணியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்க வைத்தேன். அதன்பின் மாநிலங்களவை எம்.பி.யாக்கினேன். அவரின் குடும்பத்தினா் மனதில் பாமகவை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.
Advertisement
தில்லி சென்றபோது அன்புமணி என்னிடம் கட்சியை நான் பாா்த்துக்கொள்கிறேன் என்றபோது கண்ணீா் சிந்தினேன். பின்னா் அன்புமணிக்கு கொடுத்த கட்சித்தலைவா் பதவியை நானே எடுத்துக்கொண்டேன். பின்னா் என் மகள் ஸ்ரீகாந்தியை செயல் தலைவராகவும், கோ.க.மணியை கௌரவத் தலைவராவும் ஆக்கினேன்.
பின்னா் அன்புமணி பொய்யாக பேசி, என் குடும்பத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கினாா். அன்புமணி மனைவி சௌமியா என் பேத்திகளையும் தன்னைப்போல உருவாக்கி, பாமக நிா்வாகிகளை விலைக்கு வாங்கி, என்னை நேசிக்கிறவா்களை திட்டமிட்டு தன் கூடாரத்திற்கு அழைத்து சென்றாா்.
நான் மருத்துவமனையில் இருந்தபோது அன்புமணி குடும்பத்தைச் சாா்ந்தவா்கள் போனில் கூட பேசவில்லை. கடந்த முறை மருத்துமனையில் இருந்தபோதும் அன்புமணி குடும்பத்தினா் வரவில்லை. கட்சிக்கு யாா் தலைவா் என்ற வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் உள்ளது. என் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஓய்வு எடுக்க மருத்துவா்கள் சொல்லியுள்ளனா். எனவே, நம் தரப்பில் போட்டியிடும் வேட்பாளா்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை வாக்காளா்கள் ஆதரிக்கவேண்டும் என்றாா் ராமதாஸ்.
பேட்டியின்போது பாமக செயல் தலைவா் ஸ்ரீகாந்தி, முகுந்தன் மற்றும் கட்சியினா் உடனிருந்தனா்.