71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 7
மின்னும் சடை
பாடல் 7:
படரொளி சடையின் உள்ளால் பாய்புனல் அரவினோடு
சுடரொளி மதியம் வைத்துத் தூவொளி தோன்றும் எந்தை
அடரொளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர் தங்கள்
இடரவை கெடவும் நின்றார் இடைமருது இடம் கொண்டாரே
விளக்கம்:
படரொளி=ஒளிபடர்ந்து மின்னும் சடை; பொன்னிறமாக ஒளிவீசும் சடையை உடைய பெருமானின் மேனியும் சுடர் விட்டு ஒளி வீசுகின்றது என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அடரொளி விடை=அடர்த்த வெண்மை நிறம் கொண்டு ஒளிவீசும் இடபம்;
பொழிப்புரை:
பொன்னிற ஒளி படர்ந்து வீசும் சடையின் உள்ளே, பாய்ந்து மிகுந்த வேகத்தோடு வந்த கங்கை நதியை வைத்த பெருமான், அதே சடையினில் பாம்பினையும் ஒளிவீசும் சந்திரனையும் வைத்துள்ளார். தூய ஒளியாக பிரகாசிக்கும் எனது தந்தையாகிய பெருமான், அடர்ந்த வெண்மை நிறத்துடன் ஒளி வீசும் இடபத்தினைத் தனது வாகனமாக ஏற்றுள்ளார். அடியார்களின் துன்பங்களைத் போக்க வல்ல பெருமான் இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார்.
Advertisement