முகப்பு
தினம் ஒரு தேவாரம்

71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 8

பகை தீர்த்து

Updated On : 2 ஜனவரி, 2018 at 11:33 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:13 PM

பாடல் 8:
    கமழ்தரு சடையின் உள்ளால் கடும் புனல் அரவினோடு
    தவழ் தரு மதியம் வைத்துத் தன்னடி பலரும் ஏத்த
    மழுவது வலம் கையேந்தி மாதொரு பாகமாகி
    எழில்தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்
                                                                           கொண்டாரே

விளக்கம்:
சென்ற பாடலில் மற்றும் இந்த பாடலில், சடையில், பாய்ந்து வந்த கங்கை நதி, விடம் கொண்ட பாம்பு, சந்திரன் ஆகிய மூன்றையும் வைத்த பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த மூன்று பொருட்களும் ஒன்றுக்கொன்று பகைமையுடன் விளங்குதலன்றி, ஒன்றுக்கொண்டு மாறுபட்ட குணங்களைக் கொண்டவை. இந்த மூன்று பகைவர்களையும் தனது சடையில் வைத்து பகை தீர்த்து ஆண்ட பண்பு, பல தேவாரப் பாடல்களில் கூறப்படுகின்றது. இந்த அரிய பண்பு உடைய பெருமானை பலரும் புகழ்ந்து வணங்குவதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.     

பொழிப்புரை:
கொன்றை வன்னி மத்தம் ஆகிய மலர்களை சூடியதால் நறுமணம் கமழும் சடையினை உடைய பெருமான், தனது சடையினில் ஒன்றுக்கொன்று பகையாக உள்ள, பாய்ந்து வரும் கங்கை நீரினையும், கொடிய விடம் கொண்ட பாம்பினையும், வானில் தவழ்கின்ற சந்திரனையும் வைத்துள்ளார். இந்த மூன்று பொருட்களின் இடையே உள்ள பகையினை தீர்த்து அவை மூன்றையும் ஆட்கொண்டு சடையில் வைத்துள்ள வல்லமை பலராலும் புகழப்பட்டு, அவர்கள் அனைவரும் பெருமானின் திருவடிகளை வணங்குகின்றார்கள். இத்தகைய பண்பினை உடைய பெருமான், தனது வலது கையினில் சூலத்தை ஏந்தியவராகவும், தனது உடலின் இடது பாகத்தில் பார்வதி தேவியை வைத்தவராகவும் காணப்படுகின்றார். இவ்வாறு காட்சி தரும் பெருமான், அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார்.   

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.