72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 4
கவலை கொள்வதும்
பாடல் 4:
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மையேல் பிறவித் துயர் தீர்த்திடும்
எம்மை ஆளும் இடைமருதன் கழல்
செம்மையே தொழுவார் வினை சிந்துமே
விளக்கம்:
இம்மை=இந்த பிறவி, அம்மை=அடுத்த பிறவி; இறைவனைத் தொழும் அடியார்களின் வினைகள் நாசமாகும் என்று முந்திய பாடலில் கூறிய அப்பர் பிரான், இவ்வாறு வினைகள் நாசமாவதால் ஏற்படும் விளைவினை இந்த பாடலில் கூறுகின்றார். வினைகள் தாமே நாம் மறுபடியும் மறுபடியும் பிறப்பதற்கு காரணமாக உள்ளன. அந்த வினைகள் நீங்கப்பெற்றால், நமக்க இனிமேல் பிறவி ஏது. ஐந்த பொறிகளின், ஆளுமையில் உள்ள இந்த உயிர், தான் உறைந்துள்ள இந்த உடலைப் பற்றிய கவலை கொள்வதும் மிகவும் இயற்கை. அதனை உணர்ந்த அப்பர் பிரான், இம்மைக்கும் நன்மை பயக்கும் வழிபாடு என்று இந்த பாடலை தொடங்குகின்றார்.
பொழிப்புரை:
இடைமருது இறைவனைத் தொழும் அடியார்கள், இந்த பிறவியில் செல்வ வளமும் உடல் வளமும் பெற்று, அந்த வளங்களின் உதவியால், வானவர் தங்களது வாழ்க்கையை இனிமையாக கழிப்பது போன்று, தங்களது வாழ்க்கையில் அனைத்து நலன்களும் பெற்று வாழ்வார்கள். எம்மை ஆள்பவனாகிய இடைமருது இறைவனனின் திருப்பாதங்களைத் சிறந்த முறையில் தொழும் அடியார்கள், தங்களது வினைகள் முற்றிலும் நீங்கப் பெற்று, வினைகளால் பிணைக்கப்பட்டுள்ள பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைந்து, அடுத்த பிறப்பு என்பது அற்ற நிலையினை அடைவார்கள்.
Advertisement