53. கொள்ளும் காதன்மை - பாடல் 8
வேள்வி முதலான காரியங்களில்
கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன்
நீல மா மயிலாடுதுறையனே
நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே
விளக்கம்
கோல் = யோக தண்டம். புல் = தருப்பை. கூர்ச்சம் = தருப்பைப் புற்களை இணைத்து அதன் நுனிகளை முடிந்து செய்யப்படுவது. அந்தணர்கள் வேள்வி முதலான காரியங்களைத் தொடங்குவதற்கு முன்னர், புல்லினையும் கூர்ச்சத்தையும் கையில் இடுக்கிக்கொண்டு சங்கல்பம் செய்துகொள்வார்கள். தோல் = மான் தோல். நூல் = அறிவு தரும் நூல்கள் என்றும் பூணூல் என்று இரண்டு பொருள்களும் பொருந்தும். வேதங்கள் சொல்லும் பொருளின் உண்மையை, சிவபெருமானின் தன்மையை உணர்ந்தவர்களுக்கு, சாதனங்கள் ஏதும் தேவைப்படாது என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.
Advertisement
பொழிப்புரை
மூன்று கிளைகளை உடைத்த யோக தண்டத்தினையும், தர்ப்பை புல்லினையும், தர்ப்பைப் புற்களை இணைத்து அதன் நுனிகளை முடிந்து செய்யப்படும் கூர்ச்சத்தையும் கையில் கொண்டவாறு, தோலினால் ஆன ஆடையையும் அணிந்த பின்னரும், தாங்கள் செய்ய வேண்டிய வேள்வி முதலான காரியங்களில் மனம் பதியாமல் துயரம் அடைந்தால், என்ன பயனும் ஏற்படாது. நீல மயில்கள் நடமாடும் சிறப்பு வாய்ந்த மயிலாடுதுறை தலத்தில் உறைபவனும், வேதங்களில் சொல்லப்படும் மெய்ப்பொருளின் வடிவமாகிய சிவபெருமானை உணர்ந்தவர்களுக்கு, வேறு எந்த அறிவு நூல்களும் தேவைப்படாது.