68.மஞ்சனே மணியும் ஆனாய் - பாடல் 9
திருவிக்ரமனாக அவதாரம்
நெடியவன் மலரினானும் நேர்ந்து இரு பாலும் நேடக்
கடியதோர் உருவம் ஆகிக் கனல் எரியாகி நின்ற
வடிவின வண்ணம் என்றே என்று தாம் பேசலாகார்
அடியனேன் நெஞ்சில் உள்ளார் ஆவடுதுறை உளானே
விளக்கம்:
நெடியவன் = திருவிக்ரமனாக அவதாரம் எடுத்த திருமால். மலரினான் = திருமாலின் நாபியில் இருந்த வந்த தாமரை மலரில் தோன்றிய பிரமன். நேர்ந்து = உடன்பட்டு, தங்களில் யார் பெரியவன் என்பது குறித்து வாதம்செய்த பிரமனும் திருமாலும், தங்கள் முன்னே தோன்றிய சோதியின் அடியையோ அல்லது முடியையோ காண்பவரே பெரியவர் என்று தங்களுக்குள்ளே உடன்பட்ட நிலை. இருபாலும் = மேலும் கீழும், பறந்தும் ஆழ்ந்தும் சென்ற தன்மையை குறிக்கின்றது. நேடுதல் = தேடுதல். கடியதோர் உருவம் = அணுகக்கூடிய உருவம், எதிரே தோன்றியதால் இருவரும் எளிதில் அணுகக்கூடிய உருவமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொழிப்புரை:
திரிவிக்ரமனாக நெடிய உருவம் கொண்ட திருமாலும், திருமாலின் நாபிக் கமலத்தில் உதித்த பிரமனும், தங்களுக்கு எதிரே தோன்றிய சோதியின் அடியையும் முடியையும் எவர் காண்கின்றாரோ அவரே தங்களுக்குள் உயர்ந்தவர் என்ற முடிவுக்கு உடன்பட்டனர். பின்னர் இருவரும் இருவேறு திசையில் (பிரமன் அன்னமாக மேல்நோக்கியும், திருமால் பன்றியாக கீழ் நோக்கியும்) தங்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் எதிரே எழுந்த உருவத்தின் வடிவம் என்ன என்பதையும் வண்ணம் என்ன என்பதையும் தாங்கள் அறிய முடியாததால் அதனைப் பற்றி பேச இயலாதவர்களாக இருவரும் இருந்தனர். திருமாலும் பிரமனும் அறிய முடியாத அரியவனாக இருந்தாலும், அடியேனின் நெஞ்சத்தில் நிலையாக ஆவடுதுறைப் பெருமான் வீற்றிருக்கின்றார்.
Advertisement