68.மஞ்சனே மணியும் ஆனாய் - பாடல் 10
மங்கை நடுங்கினாள்
மலைக்கு நேராய அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள
உலப்பிலா விரலால் ஊன்றி ஒறுத்தவற்கு அருள்கள் செய்து
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே
விளக்கம்:
உலப்பு = அழிவு. அலைத்த = அலைகள் வீசும். ஒறுத்தல் = தண்டித்தல். சென்றுற = சென்று நிற்க.
பொழிப்புரை:
கயிலை மலைக்கு நேராக அரக்கன் இராவணன் சென்று, அந்த மலையினை தனது இரு கைகளாலும் தூக்கித் தனது தலையின் மேல் தாங்கிக்கொண்டான். அப்போது மலையில் ஏற்பட்ட அசைவினால், உமை மங்கை நடுங்கினாள். அதனைக் கண்ட சிவபெருமான், இராவணனின் வலிமை அழியுமாறு, என்றும் அழிவில்லாத தனது கால் விரலால் மலையை ஊன்றி, அரக்கனை தண்டித்தான். இத்தகைய வல்லமை பெற்ற சிவபெருமான் தான், அலைகள் நிறைந்த கங்கை நதி வானத்தில் இருந்து இறங்கும்போது அதனைத் தனது சடையில் தாங்கிய ஆவடுதுறைப் பெருமான் ஆவார்.
Advertisement