முகப்பு
தினம் ஒரு தேவாரம்

53. கொள்ளும் காதன்மை -  பாடல் 10

தன்னைச் சரண் அடைந்த நிலவுக்கு

Updated On : 22 மார்ச், 2017 at 4:27 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:33 PM

நீள் நிலா அரவச் சடை நேசனைப்
பேணிலாதவர் பேதுற ஓட்டினோம்
வாணிலா மா மயிலாடுதுறை தனைக்
காணில் ஆர்க்கும் கடும் துயர் இல்லையே
 

விளக்கம்

பேதுற = துன்பம் உற. சிவபெருமானை பேணி வணங்காதவர்கள் துன்பம் உறுவார்கள். எனவே அவர்களை தங்கள் கூட்டத்திலிருந்து ஓட்டியதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது சேந்தனார் அருளிய பல்லாண்டுப் பதிகத்தின் (ஒன்பதாம் திருமுறை) பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. சிவபெருமானை நினைந்து உருகாத மனமுடையவர்கள் வெளியே போக வேண்டும் என்றும் உண்மையான மெய்யடியார்கள் விரைந்து வாருங்கள் என்றும் சேந்தனார் இந்த பாடலில் அழைக்கின்றார். மிண்டு மனத்தவர் = கல் போன்று வலிய மனம் உடையவர்கள். கொண்டும் = அவனது திருவருளைப் பெற்றுக்கொண்டும். கொடுத்தும் = உடல் பொருள் ஆவி அனைத்தும் இறைவனுக்கு வழங்கியும். எந்த குடியில் பிறந்தவர்களாயினும் வாருங்கள் என்று சேந்தனார் இங்கே அழைக்கின்றார். சேந்தனார் மனிதர்களை இருவகையாக பிரிக்கின்றார், சிவபெருமானை நினைத்து உருகுவோர், கல் மனம் படைத்தவர்களாய் அவனை நினையாது இருப்போர்கள் என்பதே அந்த இரு பிரிவுகள். மெய் அடியார்களே நீங்கள் அனைவரும் வாருங்கள், உலகங்களை கடந்த பெருமானுக்கு, காலத்தைக் கடந்து என்றும் இருக்கும் பெருமானுக்கு, அளவில்லாத ஆனந்தம் அளிக்கும் பெருமானுக்கு நாம் அனைவரும் சேர்ந்து பல்லாண்டு பாடுவோம் என்று அழைக்கும் பாடல்.

Advertisement

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து
                    வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்மின் குழாம்
                    புகுந்து
அண்டம் கடந்த பொருள் அளவில்லதோர் ஆனந்த வெள்ளப்
                    பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு
                    கூறுதுமே

மேற்கண்ட பல்லாண்டு பதிகத்தில் சேந்தனார் மக்களை இரு பிரிவாக பிரிப்பது நமக்கு ஞான சம்பந்தரின் இடர் களையும் பதிகத்தின் முதல் பாடலை (1.52) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் ஞானசம்பந்தர் மக்களை குறை உடையார் மற்றும் நிறை உடையார் என்று இரண்டு வகையாக பிரிக்கின்றார், மறையை உடையவனே, புலித்தோலை ஆடையாக அணிந்தவனே, சடையில் வளரும் பிறையை உடையவனே, பிஞ்ஞகனே என்று சிவபெருமானை புகழ்ந்து அழைப்பவர்களை நிறையுடையார் என்று அழைக்கும் சம்பந்தர் ஏனையோரை குறையுடையார் என்று அழைக்கின்றார். அவ்வாறு குறையினை உடையவர்களின் குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளுமாறு சிவபெருமானிடம் வேண்டும் சம்பந்தரின் பரந்த உள்ளத்தை நாம் இங்கே காணலாம். சிவபெருமானைத் தொழுது நிறையுடன் வாழும் அடியார்களின் துன்பங்களைக் களைய வேண்டும் என்று அடியார்களுக்காக சம்பந்தர் பெருமானிடம் வேண்டும் பாடல் இது.

மறை உடையாய் தோல் உடையாய் வார்சடை மேல் வளரும்
பிறை உடையாய் பிஞ்ஞகனே என்று உன்னை பேசின் அல்லால்
குறை உடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

நேசன் = அன்பன். நீணிலா = நீண்ட நிலா, பெருமானைச் சரண் அடைந்ததால் தனது ஆயுள் நீட்டிக்கப்பட்ட நிலா. வாணிலா = ஒளி திகழும் சந்திரன், இங்கே புகழுடன் திகழும் பெருமானை குறிக்கின்றது.

பொழிப்புரை

தன்னைச் சரண் அடைந்த நிலவுக்கு நீண்ட வாழ்நாளை அளித்தவனை, பாம்பினைத் தனது சடையில் சூடிய சிவபெருமானைப் பேணாதவர்களை எங்களது குழுவிலிருந்து நீக்கிவிட்டோம். அடியார்களே, ஒன்றினை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்; புகழொளி மிக்கவனும், மயிலாடுதுறை தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானை கண்டு வணங்கும் அடியார்களுக்கு கொடுமையான துயரங்கள் இல்லை என்பதை உணர்ந்து பெருமானை வணங்கி பயன் பெறுவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.