59. ஒருவராய் இரு மூவராய் - பாடல் 9
பால் போன்று வெண்மை நிறத்தில்
வெள்ளை நீறணி மேனியவர்க்கு எலாம்
உள்ளமாய பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர் கடம்பூர்க் கரக்கோயிலே
விளக்கம்
வெள்ளை நீர் = பால் போன்ற வெண்ணீறு. அடியவர்களின் உள்ளத்தில் பெருமான் நிறைந்து இருப்பதால், அவர்களின் உள்ளத்தில் தன்னைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இலாதவாறு செய்யும் பெருமானை அடியார்களின் உள்ளம் அவரும் கள்வன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு, ஞானசம்பந்தர் அருளிய தோடுடைய என்று தொடங்கும் பதிகம் (1.1) நினைவுக்கு வருகின்றது. தோணிபுரத்து திருக்கோயில் சிகரத்தினை நோக்கி, அம்மையே அப்பா என்று அழுத தன்பால் கருணைகொண்டு, இடபத்தில் அம்மையுடன் எழுந்தருளி, தனக்கு ஞானப்பால் அளித்து அருட்செயலால் தனது உள்ளத்தைக் கவர்ந்த பெருமானை, என் உள்ளம் கவர் கள்வன் என்று பதிகத்தின் பத்து பாடல்களிலும் அழைத்து ஞானசம்பந்தர் மகிழ்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
பொழிப்புரை
பால் போன்று வெண்மை நிறத்தில் உள்ள திருநீற்றினைத் தனது உடலின் மீது பூசிய அடியார்களின் உள்ளத்தில் நிறைந்து நிற்பவரும், ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் அடைக்கலம் புகுந்த சந்திரனை, தேய்ந்து அழியாமல் அன்று முதல் வளரும் இளமதியாக மாற்றித் தனது சடையில் அணிந்துகொண்டவரும், அடியார்களின் உள்ளத்தில் நிறைந்து வேறு எந்த சிந்தனையும் அவர்களது உள்ளத்தில் தோன்றாத வண்ணம் செய்து அவர்களது உள்ளத்தைக் கவர்ந்துகொண்ட கள்வரும் ஆகிய பெருமான், தனது இருப்பிடமாகக் கொள்வதற்கு சேர்ந்த இடம் கடம்பூர் கரக்கோயிலாகும்.