72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 8
எஞ்சியிருக்கும் இறைவன்
பாடல் 8:
வெந்த வெண்பொடி பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடும் கருத்தனார்
எந்தை என் இடைமருதினில் ஈசனைச்
சிந்தையால் நினைவார் வினை தேயுமே
விளக்கம்:
கந்தம்=வாசனை; வெந்த வெண்பொடி=முற்றூழிக் காலத்தில் அனைத்து உயிர்களும் தாங்கள் பொருந்தியிருந்த உடலினை விட்டு ஒருங்கே விலக, அவ்வாறு உயிரற்ற உடல்கள் எரிந்த சாம்பல்; விகிர்தன்=மாறுபட்டவன்; அனைத்து உயிர்களும் தன்னிடம் ஒடுங்க, அனைத்துப் பொருட்களும் அனைத்து உடல்களும் அழிந்த பின்னரும் எஞ்சியிருக்கும் இறைவனின் தன்மை மற்றவரிடமிருந்து மாறுபட்ட தன்மை என்பதால் அப்பர் பிரான், இந்த பாடலில் இறைவனை விகிர்தன் என்று குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
உலகிலுள்ள அனைத்து பொருட்களும், உலகிலுள்ள அனைத்து உடல்களும் அழிந்து எரிந்த பின்னரும், தான் மாட்டும் எந்த விதமான மாற்றமும் அடையாமல் ஏனையோரிடமிருந்து வேறுபட்டு விகிர்தனாக இருப்பவர் சிவபெருமான். நறுமணம் நிறைந்த மாலைகள் சூடும் பெருமானாகிய அவர், அனைத்து உயிர்களின் கருத்திலும் பரவி நிற்கின்றார். எனது தந்தை போன்றவராகிய பெருமானை, இடைமருது தலத்தில் உறையும் தலைவனை, தங்களது சிந்தைனையால் நினைக்கும் அடியார்களின் வினைகள் தேய்ந்து அழிவுறும்.
Advertisement