98. கற்றாங்கு எரியோம்பி - பாடல் 10
வாழும் மேன்மை
பாடல் 10:
பட்டைத் துவராடை படிமம் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே
விளக்கம்:
பெருமானைத் தொழுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை முந்தைய ஆறு பாடல்களை விளக்கிய சம்பந்தர், நாம் அனைவரும் இறைவனை தினமும் தொழுது அந்த பயன்களை பெற்று மகிழ்வோம் என்று ஊக்குவிக்கும் பாடல். பட்டைத் துவர் ஆடை=மரப் படைகளில் துவர் நிறம் ஏற்றப்பட்ட ஆடை; படிமம்=நோன்பு; முட்டைக் கட்டுரை=சாரம் ஏதும் இல்லாமல் பொய்களைக் கொண்டு புனையப் பட்ட சொற்கள்; வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படுவன நார்ப்பட்டு ஆடைகள்;
பொழிப்புரை:
மரப் பட்டைகளில் துவர் வண்ணம் ஏற்றப்பட்ட ஆடைகளை அணிந்துள்ள புத்தர்களும், நோன்புகள் பலவற்றை மேற்கொள்ளும் சமணர்களும் கூறும் சாரம் ஏதுமற்று பொய்களைக் கொண்டு புனையப்பட்ட சொற்களை, தில்லைச் சிதம்பரத்தில் வாழும் மேன்மை வாய்ந்த மனிதர்கள் பொருட்படுத்தாமல் புறக்கணித்து விடுவார்கள். அத்தகைய மேன்மை வாய்ந்த நகரத்தில் உள்ள சிற்றம்பலத்தில் நடனம் ஆடும் பெருமானை நாம் அனைவரும் தினமும் தொழுவோமாக.