100. படையார் தருபூதப் - பாடல் 4
பெருமானின் சிறப்பினைப்
பாடல் 4:
அரையார் தரு நாகம் அணிவான் அலர் மாலை
விரையார் தரு கொன்றை உடையான் விடையேறி
வரையான் எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற
திரையார் சடையானைச் சேரத் திருவாமே
விளக்கம்:
Advertisement
வரையான்=மலையினை உடையவன், இங்கே கயிலாய மலை குறிப்பிடப்படுகின்றது. திரு= முக்திச் செல்வம்; அரையார்=இடுப்பினில் பொருந்திய; விரை=நறுமணம்; திரு=செல்வம். பெருமானின் திருவடிகளைச் சென்று சார்வதால் பெறுகின்ற அவனது அருளே சிறந்த செல்வம் என்று சம்பந்தர் இங்கே கூறுவது அவர் அருளிய தில்லைப்பதிகத்தின் பாடலை (1.80.5) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் பெருமானின் சிறப்பினைப் பாடுவதே சிறந்த செல்வம் என்று சம்பந்தர் கூறுகின்றார். சேண்=ஆகாயம் வேறு எவரிடமும் இல்லாததும் அழிவிலாததும் ஆகிய முக்தி செல்வத்தை உடைய பெருமானே சிறந்த செல்வனாக கருதப் படுகின்றான். அவனை வணங்குவதாலும் அவனது புகழினைப் பாடுவதாலும் அவனது அருளினைப் பெற்று அதனால் அடையப்பெறும் முக்திச் செல்வத்தை விடவும் சிறந்த செல்வம் வேறு உளதோ.
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே
பொழிப்புரை:
தனது இடுப்பினில் கச்சாக நாகத்தை இறுகக் கட்டியவனும், தான் சூட்டிக்கொள்ளும் மாலையாக நறுமணம் கமழும் கொன்றையினை உடையவனும், இடபத்தின் மீது ஏறி எங்கும் செல்பவனும், கயிலாய மலையினை தனக்குரிய இருப்பிடமாகக் கொண்டவனும், எருக்கத்தம்புலியூர் தலத்தினில் மகிழ்ந்து உறைபவனும், அலைகள் வீசும் வண்ணம் அதிகமான நீர்ப் பெருக்கு கொண்ட கங்கை நதியினைத் தனது சடையில் அணிந்தவனும் ஆகிய பெருமானைச் சென்று சார்வதே சிறந்த செல்வமாகும்.
Audio