100. படையார் தருபூதப் - பாடல் 6
எருக்கத்தம்புலியூர் தலத்தில்
பாடல் 6:
நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடிப்
புகுவான் அயம் பெய்யப் புலித்தோல் பியற்கு இட்டுத்
தகுவான் எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே
தொகுவான் கழல் ஏத்த தொடரா வினை தானே
விளக்கம்:
Advertisement
அயம்=ஐயம், பிச்சை; அயம் பெய்ய=பெண்கள் பிச்சை இடும் பொருட்டு; ஐயம் என்ற சொல் திரிந்து அயம் என வந்தது; தகைந்து=பொருந்தி; தொகுவன்=கூர்ந்து வெளிப்பட நிற்பவர்; வாய் பிளந்த நிலையில் இருக்கும் பிரமகபாலத்தை, நகு வெண்தலை என்று நகைச்சுவை தோன்ற சம்பந்தர் கூறுகின்றார்.
பொழிப்புரை:
வாய் பிளந்த நிலையில் சிரிப்பது போல் தோன்றும் பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம், பல விதமான பாடல்களை பாடியவாறு, மகளிர் இடும் பிச்சையை ஏற்பதற்காக செல்லும் இறைவன், புலித்தோலை தனது தோள்கள் மீது அணிந்துள்ளான். அவன் தகுதி வாய்ந்த எருக்கத்தம்புலியூர் தலத்தில் பொருத்தி உறைகின்றான். இவ்வாறு இந்த தலத்தில் நிலையாக அனைவரும் காணும் வண்ணம் உறையும் பெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருப்பாதங்களைப் புகழ்ந்து பாடும் அடியார்களை வினைகள் பின்பற்றி செல்லாது விலகி நிற்கும்.
Audio