92. நறவ நிறை வண்டு - பாடல் 7
எண்ணற்ற தேவர்கள்
பாடல் 7:
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒரு
தோழம் தேவர்
விண்ணில் பொலிய அமுதம் அளித்த விடை சேர்
கொடி அண்ணல்
பண்ணில் சிறை வண்டு அறை பூஞ்சோலைப்
புறவம் பதியாக
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு
இருந்தானே
விளக்கம்:
தோழம்=எண்ணிறந்த; பாற்கடலிலிருந்து கருமையான விடம் பொங்கி வந்த போதே அதன் தாக்கத்தினால் அனைத்து தேவர்களும் இறந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எவரும் இறவாமல், விண்ணில் பொலிவுடன் வாழும் வண்ணம், அந்த நஞ்சினை உட்கொண்டவன் பெருமான் என்று, பெருமான் நஞ்சினை உண்டு அமரர்களைக் காத்த செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது
Advertisement
பொழிப்புரை:
எவரும் உட்கொள்ள முடியாத நஞ்சினைத் தான் உண்டு எண்ணற்ற தேவர்கள் விண்ணில் பொலிவுடன் வாழும் வண்ணம் அமுதம் உண்பதற்கு வழி வகுத்த இறைவன், இடபம் வரையப் பெற்ற கொடியினை உடையவன் ஆவான். சிறகினை உடைய வண்டுகள் இடைவிடாது ரீங்காரமிடும் வளமான பூஞ்சோலைகளை உடையதும் புறவம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு தன்னை எண்ணற்ற இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றார்