முகப்பு
தினம் ஒரு தேவாரம்

92. நறவ நிறை வண்டு - பாடல் 8

காயங்கள் மறையும்

Updated On : 30 மார்ச், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:06 PM


பாடல் 8:

  
 விண் தான் அதிர வியனார் கயிலை வேரோடு
                  எடுத்தான் தன்
    திண் தோள் உடலும் முடியும் நெரிய
                  சிறிதே ஊன்றிய
    புண் தான் ஒழிய அருள் செய்தான்
                   புறவம் பதியாக
    எண் தோளுடையான் இமையோர் ஏத்த
                   உமையோடு இருந்தானே

விளக்கம்:

வியனார்=அகலமுடைய; மிகுந்த ஆரவாரத்துடன் இராவணன் கயிலை மலையினை நோக்கிச் சென்றதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மேலும் பெருமான் சிறிதே ஊன்றினான் என்று கூறுகின்றார். சற்று பலமாக ஊன்றியிருந்தால் அரக்கன் என்னவாகி இருப்பான் என்பதை நமது கற்பனைக்கு சம்பந்தர் விட்டு விடுகின்றார். சிறிதே ஊன்றினான் என்று சம்பந்தர் சொல்வது, அப்பர் பிரான் திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பாடல்களை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இந்த பதிகத்தின் பாடல்களில் (4.47) அப்பர் பிரான், இறைவன் சற்றே தனது கால்விரலின் அழுத்தத்தை கூட்டியிருந்தால், எவரும் அரக்கன் இராவணனை மீண்டும் காணும் வாய்ப்பே இருந்திருக்காது என்று கூறுகின்றார். களித்தவன்=கயிலை மலையினை தான் பேர்த்து எடுக்கப் போகின்றோம் என்ற எண்ணத்தில் மிகுந்த மனக் களிப்புடன்; நெளித்தவன்=உடலினை வளைத்துக் கொண்டும் நெளித்துக் கொண்டும்; நேரிழை=அன்னை பார்வதி; வெளித்தவன்=அடியார்க்கு தன்னை மறைக்காமல் வெளிப்படுத்துபவன்; மளித்து=மீண்டும் மீண்டும்

Advertisement

    களித்தவன் கண் சிவந்து கயிலை
                                நன்மலையை ஓடி 
    நெளித்தவன் எடுத்திடலும் நேரிழை
                               அஞ்ச நோக்கி
    வெளித்தவன் ஊன்றி இட்ட வெற்பினால்
                               அலறி வீழ்ந்தான்
    மளித்து இறை ஊன்றினானேல் மறித்து
                               நோக்கில்லை தானே 

 
பொழிப்புரை:

விண் அதிரும் வண்ணம் ஆரவாரத்துடன், அகன்ற கயிலை மலையினை நோக்கி வந்த அரக்கன் இராவணன், அந்த கயிலை மலையினை அடியோடு பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது அவனது வலிமையான தோள்களும் உடலும் தலைமுடிகளும் சிதறி வீழும் வண்ணம் தனது கால் விரலை சிறிதாக ஊன்றியவன் பெருமான். இவ்வாறு அழுத்தியதால் மலையின் கீழே அமுக்குண்டு அரக்கன் அலறி பின்னர் சாமகானம் இசைத்து இறைவனை வேண்டிய போது, மலையின் கீழே அழுந்தியதால் ஏற்பட்ட காயங்கள் மறையும் வண்ணம் அவனுக்கு அருள் செய்தவர் சிவபெருமான். இத்தகைய பெருமான், வலிமையான எட்டு தோள்களை உடையவன், புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.