92. நறவ நிறை வண்டு - பாடல் 10
விட்டெரியும் தீச்சுடர்
பாடல் 10:
ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவில்
சிறு தேரர்
கோலும் மொழிகள் ஒழியக் குழுவும் தழலும்
எழில் வானும்
போலும் வடிவும் உடையான் கடல் சூழ்
புறவம் பதியாக
ஏலும் வகையால் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே
விளக்கம்:
ஆலும் மயில்=அகவும் மயில்; கோலும்=புனைந்து பேசும் மொழிகள்; குழலும்=கூடி;; ஏலும்=பொருந்தும்
Advertisement
பொழிப்புரை:
அகவும் மயிலின் இறகினை கையினில் ஏந்திய சமணர்களும், குறைந்த அறிவு உடையவர்களாக விளங்கிய புத்தர்களும், பொய்களைக் கலந்து புனைந்து பேசும் சொற்கள் மக்களிடையே பரவாமல் தாழச் செய்பவனும், கூடிக் கொழுந்து விட்டெரியும் தீச்சுடர் மற்றும் செவ்வானத்தின் நிறத்தில் திருமேனியை உடையவனும் ஆகிய இறைவன் கடலால் சூழப்பட்டதும் புறவம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழி நகரத்தில் தன்னை இமையோர்கள் வந்து பொருந்தும் வகையில் தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றார்