96. கண் காட்டு நுதலானும் - பாடல் 10
ஈசனது திருவருளை
பாடல் 10:
போதியர்கள் பிண்டியர்கள் விண்டு மொழி
பொருள் என்னும்
பேதையர்கள் அவர் பிறிமின் அறிவுடையீர்
இது கேண்மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு
வெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீதிலர் என்று உணருமினே
விளக்கம்:
Advertisement
போதியர்=போதி மரத்தை வழிபடும் புத்தர்கள்; பிண்டி=அசோகா மரம்; பிண்டியர்கள்=அசோக மரத்தை வழிபடும் சமணர்கள்; மிண்டு மொழி=முரட்டுத் தனமான சொற்கள், உண்மையை திரித்து பழித்துக் கூறும் சொற்கள்; கல் போன்று கடினமான சொற்கள்; பேதையர்=அறிவில் முதிர்ச்சி அற்றவர்கள்; சீர்=மிகுந்த புகழ்; மிண்டு மொழி என்று திருஞானசம்பந்தர் கூறுவது, நமக்கு மிண்டு மனத்தவர் என்று சேந்தனார் திருபல்லாண்டு பதிகத்தில் கூறுவதை நினைவூட்டுகின்றது; கல் போன்று கடிய மனம் கொண்டு பெருமானை நினைத்து உருகாத மனிதர்களே நீங்கள் அனைவரும் எங்களை விட்டு நீங்குங்கள் என்று விரட்டும் சேந்தனார், உண்மையான அடியார்களே நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள் என்று அழைத்து, அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதையும் இந்த பாடலில் உணர்த்துகின்றார். சாதி வேறுபாடின்றி அவர்கள் அனைவரும் கொள்ளவேண்டியது யாது என்பதையும் கொடுக்கவேண்டியது யாது என்பதையும் உணர்த்துகின்றார். ஈசனது திருவருளை பெற்றுக் கொண்டு அவனது திருவடிகளில் நமது உடல் பொருள் ஆவி அனைத்தயும் சமர்ப்பித்து அவனுக்கு அடிமையாக வேண்டும் என்று உணர்த்தும் சேந்தனார், நாம் அனைவரும் கூட்டம் கூட்டமாக தில்லைச் சிற்றம்பலம் சென்று, உலகத்தைக் கடந்த பொருள் என்றும், எல்லையற்ற ஆனந்த வெள்ளப்பொருள் என்றும், காலத்தினைக் கடந்து பண்டைய நாளிலும் இன்றும் என்றும் இருக்கும் பொருள் என்றும் இறைவனைப் புகழ்ந்து அவன் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்த வேண்டும் என்று கூறுகின்றார்.
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள்
விரைந்து வம்மின்
கொண்டும், கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்மின்
குழாம் புகுந்து
அண்டம் கடந்த பொருள் அளவித்ததோர் ஆனந்த
வெள்ளப் பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே
பொழிப்புரை:
போதி மரத்தினை வணங்கும் பௌத்தர்களும் அசோக மரத்தினை வணங்கும் சமணர்களும், உண்மையை திரித்து கடுமையான வார்த்தைகள் மூலம் பெருமானை இழித்து பேசுகின்றனர். உலகத்தவரே, அவர்கள் அறிவில் முதிர்ச்சி அற்றவர்கள்;.அவர்களை விட்டு நீங்கள் பிரிந்து விடுவீர்களாக; அறிவுடைய நீங்கள் நான் சொல்வதை கேட்பீர்களாக. அந்தணர்கள் விரும்புவதும் மிகுந்த புகழினை உடையதும், பெரியதும் ஆகிய திருவெண்காடு தலத்தில் உறையும் பெருமானின் திருநாமங்களை ஓதும் அடியார்கள் எந்த விதமான தீங்கும் சென்று அடையாதவர்களாக இருப்பார்கள் என்பதை உணர்வீர்களாக.