96. கண் காட்டு நுதலானும் - பாடல் 11
செல்வம் பெறவும்
பாடல் 11:
தண் பொழில் சூழ் சண்பையர் கோன் தமிழ் ஞான சம்பந்தன்
விண் பொலி வெண் பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
மண் பொலிய வாழ்ந்து அவர் போய் வான் பொலியப் புகுவாரே
விளக்கம்:
Advertisement
தண்பொழில்=குளிர்ந்த சோலைகள்; சண்பை என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. விகிர்தன்=ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன்; பண்பொலி= பண்ணுடன் இசைந்து பாடுவதால் பொலிவு பெற்று விளங்கும்; பொலிவு=அழகு, சிறப்பு; இந்த பாடலில் சண்பையர் கோன் என்று தன்னை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சீர்காழி நகரில் இருந்த தொண்டர்களும், மற்ற தலங்களில் இருந்த தொண்டர்களும் திருஞான சம்பந்தரை, சைவ சமயத்தின் தலைவனாக ஏற்றுக் கொண்ட தன்மை, இங்கே சண்பையர் கோன் என்ற தொடரால் உணர்த்த படுகின்றது.
பொழிப்புரை:
குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தின் தலைவனாகிய தமிழ் ஞானசம்பந்தன், விண்ணில் பொலிவுடன் உலவும் வெண்மை நிறத்து பிறைச் சந்திரனைத் தனது தலையில் வைத்துள்ளவனும், பல தன்மைகளால் ஏனையோரிலிருந்து வேறுபட்டுள்ளவனும் ஆகிய இறைவன் உறையும் திருவெண்காடு தலத்தினை, பண்ணுடன் இசைத்துப் பாடுவதால் மேலும் அழகாக இனிமையாக விளங்கும் வண்ணம் இயற்றிய இந்த பத்து பாடல்களை பாடும் வல்லமை பெற்றவர், நிலவுலகில் மிகவும் சிறப்புடன் வாழ்ந்து, மறுமையில் சிவலோகத்திலும் சிறப்புடன் வாழ்வார்கள்.
முடிவுரை:
நல்ல மக்கட் செல்வம் பெறவும், கல்வியில் தேர்ச்சி அடையவும், ஞானம் பெறவும், பேச்சாற்றல் பெருகவும், எழுத்தாற்றல் மேம்படவும், தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ளவும் ஓத வேண்டிய பதிகமாக இந்த பதிகம் பெரியோர்களால் கருதப் படுகின்றது. செந்தமிழ் மாலை என்று திருஞான சம்பந்தர் பதிகத்தின் கடைப் பாடலில் குறிப்பிடுகின்றார். மலர்களும் இலைகளும் நாறும் சேர்ந்து தொடுக்கப்பட்ட மாலை போன்று, புராணத்தில் உள்ள செய்திகளும், சாத்திரத்தில் உள்ள செய்திகளும், இயற்கை வருணனையும் கலந்து மிகவும் அழகாக தொடுக்கப்பட்ட மாலை என்றால் மிகையாகாது. பதிகத்தின் முதல் பாடல், வேதங்கள் மற்றும் புராணங்கள் உணர்த்தும் பெருமானின் உருவத் தன்மையை உணர்த்துகின்றன. பெருமானை வணங்கும் அடியார்கள் வினை நீக்கம் பெறுவார்கள் என்று சாத்திரத்தின் செய்தி இரண்டாவது பாடலில் கூறப்படுகின்றது. விண்ணவர் கோன் வழிபட்ட தல புராண செய்தியும், இறைவன் அனைத்து பொருளாக இருக்கும் சாத்திர உண்மையும் மூன்றாவது பாடலில் கூறப்படுகின்றது. நான்காவது பாடல் இயற்கை காட்சியை படம் பிடித்து காட்டுகின்றது. ஆறாவது பாடல் கிளிகள் இறைவனது திருநாமங்களை ஓதும் தன்மையை குறிப்பிட்டு, மிகவும் அதிகமான அடியார்கள் இங்கே வழிபட்ட செய்தியை உணர்த்துகின்றது. ஐந்தாவது, எட்டாவது, ஒன்பதாவது மற்றும் ஏழாவது பாடல்கள் தல புராணச் செய்தியையும் எட்டாவது பாடல் தலத்தின் செழிப்பினையும் உணர்த்துகின்றது. பதிகத்தின் கடைப் பாடல், இந்த பதிகத்தை ஓதும் அடியார்கள் இம்மையில் சிறப்பாக வாழ்ந்து மறுமையில் முக்தி நிலையை அடைவார்கள் என்று உணர்த்துகின்றது. பதிகத்தின் சிறப்பினை உணர்ந்த நாம், பதிகத்தினை ஒன்றிய மனத்துடன் ஓதி, பயன்கள் அடைவோமாக.