114. உரையினில் வந்த பாவம் - பாடல் 6
குறுநில மன்னர்கள்
பாடல் 6:
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வாக்கும்
உண்மை உலகில்
குறை உளவாகி நின்ற குறை தீர்க்கு நெஞ்சில் நிறைவு ஆற்றும்
நேசம் வளரும்
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த
அண்ணல் கழலே
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற
திருநாரையூர் கை தொழவே
விளக்கம்:
Advertisement
மா=விலங்கு, இங்கே யானையை குறிக்கின்றது; ஊன்=தசை, இங்கே தசையுடன் கூடிய உடலினை குறிக்கின்றது. திறை=குறுநில மன்னர்கள் செலுத்தும் கப்பம், இந்த பாடலில் தேவர்கள் தங்களை இறைவனுக்கு முழுதுமாக அர்ப்பணித்துக் கொண்டு, தங்களையே திறைப் பொருளாக பாவித்து, இறைவனுக்கு தொண்டு செய்கின்றார்கள் என்று சம்பந்தர் கூறுகின்றார். உணர்வாக்கும் உண்மை என்ற தொடரினை உண்மை உணர்வாக்கும் என்று மாற்றி வைத்து பொருள் கொள்ளவேண்டும். உறை=உறைவிடம்; நிற்கும் வண்ணம்= பெருமானின் திருவடிகளில் நிலை பெற்று நிற்கும் வண்ணம்; மெய்யன்=உடலினை உடையவன்;
பொழிப்புரை:
உடலினை உறைவிடமாகக் கொண்டுள்ள உமது உயிர் பெருமானின் திருவடிகளில் நிலை பெற்று நிற்க வேண்டும் என்றும், உண்மையான மெய்ஞானப் பொருளினை உமது உள்ளம் உணர வேண்டும் என்றும், தாம் பல நற்குணங்கள் இன்றி பல செல்வங்கள் இன்றி குறைகளை உடையவர்களாக இருக்கின்றோமே என்ற உங்களது குறை தீர வேண்டும் என்றால், நிறைவினை உடைய நெஞ்சம் கொண்டு அனைத்து உயிர்களின் மீதும் இறைவன் மீது அன்பு நிறைந்தவர்களாக திகழ வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால்; புகழ் வளரும் வேதங்கள் ஓதும் நாவினை உடையவனும், மதயானையின் தோலை உரித்து அந்த தோலைத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவனும், பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக இறுகக் கட்டிக் கொண்டவனும், அனைவர்க்கும் தலைவனாக இருப்பவனும், இறைவனது அருள் வேண்டும் என்ற நோக்கத்துடன் அவனுக்கு தாங்கள் செலுத்தும் கப்பமாக நினைத்து தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து தேவர்கள் திருப்பணி செய்ய நிற்பவனும் ஆகிய பெருமான் உறையும் திருநாரையூர் தலத்தினை உங்களது கைகளால் தொழுது வணங்குவீர்களாக.