முகப்பு
தினம் ஒரு தேவாரம்

115. சுற்றமொடு பற்றவை - பாடல் 4

இறைவனை வழிபாடு

Updated On : 1 டிசம்பர், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 11:15 PM


பாடல் 4:

    மடம்படு மலைக்கு இறைவன் மங்கையொரு பங்கன்
    உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனை
    தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால்
    கடந்தவன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

Advertisement

மடம்படு என்ற சொல்லினை மலைக்கு இணைத்தும், மங்கையுடன் இணைத்தும் இருவகையாக அறிஞர்கள் பொருள் கொள்கின்றனர். மடம்=ஆசிரமம்; பல ஆசிரமங்கள் அமைத்து முனிவர்கள் தங்கி தவம் செய்யும் இமயமலை என்பது ஒரு பொருள். மடம்=மடப்பம், பேதைமை, மென்மை; மென்மையான உடலினை உடைய பார்வதி தேவி என்பது மற்றொரு பொருள்; உடம்பினை விடக்கருதி நின்ற மறையோன்=மார்க்கண்டேயன்; தனது வயது பதினாறு என்று விதிக்கப் பட்டுள்ளது என்பதை தனது தந்தையார் மூலம் அறிந்து கொண்ட சிறுவன் மார்க்கண்டேயன் தனது வாழ்நாளை நீட்டிக்க வேண்டும் என்று ஒரு போதும் விரும்பியதில்லை. தான் இறக்கும் தருவாயிலும் இறைவனை வழிபாடு செய்யவேண்டும் என்பதே அவனது விருப்பமாக இருந்தது. எனவே இறப்பு வருவது குறித்து அவன் அச்சம் கொள்ளாமல் தான் இருந்தான். மேலும் இறப்பினை எதிர்கொள்ள தயாராகவும் இருந்தான். இந்த செய்தியே இங்கே உடம்பினை விடக்கருதி நின்ற மறையோன் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. உயிர் கால=உயிர் போக அணவு=நெருங்கிய; கடந்தவன்=அடியார்க்கு வந்த துன்பத்தைத் தனது துன்பமாக கருதி அதனைப் போக்கிக் கொண்டு கடந்தவன்;
  
பொழிப்புரை:

பல ஆசிரமங்கள் அமைத்து தவம் செய்த முனிவர்கள் தங்கிய இடமாகிய இமயமலையின் தலைவன் இமவானின் மகளாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் பொருத்தி வைத்துள்ள இறைவன், குறித்த நாளில் இறப்பதற்கு தயாராக இருந்த சிறுவன் மார்க்கண்டேயனைத் தொடர்ந்து வந்து அவனது உயிரினை பறிக்கும் நோக்கத்துடன்  அவனை நெருங்கிய இயமனின் உயிர் போகும் வண்ணம் அவனைக் காலால் உதைத்து, இயமனால் தனது அடியானுக்கு நேரவிருந்த ஆபத்தினைக் கடந்த பெருமான் உறையும் தலம் கருப்பறியலூர் ஆகும்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.