109. நூலடைந்த கொள்கையாலே - பாடல் 8
புட்பக விமானம்
பாடல் 8:
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன் தன்
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்
சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே
விளக்கம்:
Advertisement
சே=இடபம்; மா=குதிரை; பொதுவாக தேர்கள் என்றால் குதிரைகளால் இழுக்கப்படும் என்பதை நாம் அறிவோம். இராவணன் பயன்படுத்திய தேர், புட்பக விமானம், வானில் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தது என்பதால் குதிரைகள் தேவைப்படாத தேராக விளங்கியது. என்றாலும் தேரின் பொதுத் தன்மை கருதி மா அடைந்த தேர் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தேர்ப்படை குதிரைப்படை உடையவனாக விளங்கினான் என்று உணர்த்தும் வண்ணம் மாவடைந்த தேர் என்று குறிப்பிட்டார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பூசுரர்=அந்தணர்;
பொழிப்புரை:
குதிரை பூட்டிய தேர்களை படையாக உடைய அரக்கன் இராவணனின் வலிமையை குறைத்து அடக்கிய பெருமான், பின்னர் அந்த அரக்கன் தனது வாயினால் சாமகீதம் இசைத்த போது அதனைக் கேட்டு மகிழ்ந்து, அவன் முன்னர் செய்த கொடிய செயலையும் பாராட்டாது (கயிலை மலையினை பேர்க்கத் துணிந்தது) மிகுந்த விருபத்துடன் அருள் புரிந்தது வியக்கத் தக்க செயலாகும். இவ்வாறு பகைவனுக்கும் அருள் புரிந்த இறைவன், தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்ட நான்முகன் போன்ற அந்தணர்கள் போற்றும் வண்ணம் இடபத்தை தனது வாகனமாகக் கொண்டவன், சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.