109. நூலடைந்த கொள்கையாலே - பாடல் 10
பூக்கள் கமழ்வதும்
பாடல் 10:
மாசு அடைந்த மேனியாரும் மனம் திரியாத கஞ்சி
நேசடைந்த ஊணினாரும் நேசம் இலாதது என்னே
வீசடைந்த தோகை ஆட விரை கமழும் பொழில் வாய்த்
தேசடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே
விளக்கம்:
Advertisement
வீசடைந்த=வீசுதலும் ஆடுதலும், நீராடும் பழக்கம் இல்லாத சமணர்களை மாசு அடைந்த மேனியர் என்று இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மனம் திரியாத=வெறுப்பு ஏதும் கொள்ளாமல் கஞ்சி உணவினை ஏற்றுக் கொண்ட தன்மை; தேசு=தேஜஸ் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.
பொழிப்புரை:
நீராடும் பழக்கம் இல்லாததால் மாசு படிந்த மேனியை உடைய சமணர்களும், வெறுப்பு ஏதும் கொள்ளாமல் கஞ்சி உணவினை விருப்பத்துடன் உணவாக ஏற்றுக் கொள்ளும் புத்தர்களும் பெருமானிடம் அன்பு கொள்ளாமல் இருப்பதன் காரணம் யாது. அவர்களது தீய வினைகளே அவர்களை நல்வழியில் செல்லாமல் தடுக்கின்றது. தங்களது தோகைகளை வீசி ஆடுகின்ற மயில்கள் நிறைந்ததும் நறுமணம் கொண்ட பூக்கள் கமழ்வதும், ஒளி வீசும் வண்டுகள் பாடுவதும் ஆகிய சோலைகள் நிறைந்த சேய்ஞலூர் தலத்தில் பெருமான் அமர்ந்து உறைகின்றான்.