109. நூலடைந்த கொள்கையாலே - பாடல் 11
பெருமானின் சிறப்பான
பாடல் 11:
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவித்
தோய் அடைந்த வண் வயல் சூழ் தோணிபுரத் தலைவன்
சாயடைந்த ஞானம் மல்கு சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாட வல்லார் வானுலகு ஆள்பவரே
விளக்கம்:
Advertisement
சேய்=பெருமானின் குழந்தையாகிய முருகப்பெருமான். தோயம்=நீர்; தோயம் என்ற சொல் தோய் என்று இங்கே எதுகை கருதி மாறியுள்ளது. சாய்=சார்பு; வண் வயல்=வளமை உடைய வயல்கள்
பொழிப்புரை:
பெருமானின் குழந்தையாகிய முருகப் பெருமான் சூரபதுமனுடன் போருக்கு செல்லும் வழியில் படைவீடு அமைத்து தங்கிய போது இறைவனை வழிபட்ட தலமும் நீர்வளம் மிகுந்து வளமையான வயல்களால் சூழப்பட்டதும் ஆகிய சேய்ஞலூரில் அமர்ந்துள்ள செல்வனாகிய பெருமானின் சிறப்பான வியப்பூட்டும் செயல்களை குறிப்பிட்டு புகழ்ந்து, தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் தலைவனும் உமையன்னை ஊட்டிய ஞானப்பாலினால் ஞானம் வந்து அடையவே ஞானவொளி பெற்றவனும் ஆகிய சம்பந்தன் சொன்ன இனிய உரைகளாகிய இந்த பத்து பாடல்களை வாய் திறந்து பாடும் திறமை பெற்றவர்கள் வானுலகினை ஆளும் தகுதியினை பெறுவார்கள்.
முடிவுரை;
தனது சிவிகையிலிருந்து கீழே இறங்கி சம்பந்தர் நடந்ததிலிருந்து சேய்ஞலூர் தலத்தின் பெருமையையும் சண்டீசர் பால் அவர் வைத்திருந்த பெருமதிப்பினையும் நாம் உணரலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் நாமும் சென்றடைந்து பெருமானையும் சண்டீசரையும் வணங்கி அவர்கள் இருவரது அன்பினையும் பெறுவோமாக. இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் உடைய என்ற சொல் வேறுவேறு பொருள்களைத் தரும் வகையில் அழகுடன் கையாளப்பட்டுள்ளது. முதல் பாடலில் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து நால்வருக்கு வேதத்தின் பொருளை விளக்கிய செயலும், இரண்டாவது பாடலில் பிறைச் சந்திரன் கங்கை மற்றும் பாம்பு ஆகியவைகளுக்கு இடையே இருந்த பகையை நீக்கி ஓரே இடத்தில் வைத்ததும், சுடுகாட்டினில் ஆடும் தன்மை மூன்றாவது பாடலிலும், திரிபுரத்து மும்மதில்களை எரித்த செய்கை நான்காவது பாடலிலும், தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலை உரித்து அச்சம் ஏதுமின்றி அந்த யானையின் தோலினை தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட செய்கையை ஐந்தாவது பாடலிலும், அர்ஜுனனுக்கு நேரவிருந்த ஆபத்திலுருந்து அவனைக் காப்பாற்றி அவனுடன் போர் செய்த திருவிளையாடல் ஆறாவது பாடலிலும், சண்டீசருக்கு பல விதமான பேறுகள் அளித்து அவரைத் தனது மகனாக ஏற்றுக்கொண்ட தன்மை ஏழாவது பாடலிலும், இராவணனின் வலிமையை குன்றச் செய்து பின்னர் அவன் சாமகானம் படிய போது வரங்கள் அளித்த கருணைச் செயல் எட்டாவது பாடலிலும், பிரமனும் திருமாலும் தங்களது செருக்கு நீங்கிய நிலையில் பணிந்து வணங்கியபோது அருளிய தன்மை ஒன்பதாவது பாடலிலும், குறிப்பிடத் சம்பந்தர் இத்தகைய பெருமையும் புகழும் வாய்ந்த பெருமானை எவரேனும் வழிபடாமல் இருந்தால் அதற்கு அவர்களது பழைய வினைகளே காரணம் என்பதை பத்தாவது பாடலில் உணர்த்தி அதற்கு உதாரணமாக புத்தர்களையும் சமணர்களையும் குறிப்பிடுகின்றார். நாம் புத்தர்களையும் சமணர்களையும் பின்பற்றாது, சம்பந்தர் குறிப்பிட்டுள்ள பெருமானின் சிறந்த செயல்களை நன்கு புரிந்து கொண்டு, சம்பந்தர் காட்டிய வழியில் நாமும் பெருமானின் பலவிதமான புகழ்ச் செயல்களை பாடி, அவனது அருள் பெற்று உய்வோமாக.