110. இடறினார் கூற்றைப் பொடி - பாடல் 6
பெருமானுடன் நட்பு
பாடல் 6:
ஒண்பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்
கணவன் வாழ்க எனவும்
அன்பினார் பிரியார் அல்லு நன் பகலும் அடியவர் அடியிணை தொழவே
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும்
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
விளக்கம்:
Advertisement
ஒண்பொன்=ஒளி வீசும் பொன்; அல்=இரவுப் பொழுது;
பொழிப்புரை:
ஒளிவீசும் திருமேனியை உடைய பெருமான் வாழ்க என்றும் உமையன்னையின் கணவன் வாழ்க என்றும், பெருமான் பால் மிகுந்த அன்பு கொண்டு இரவும் பகலும் அவனைப் பற்றிய நினைப்பிலிருந்து பிரியாமல் அவனை நெருங்கி அணைந்து அவனது திருவடிகளை அடியார்கள் தொழுகின்றனர். பெருமானுடன் நட்பு கொண்டு அவனைப் புகழ்ந்து போற்றும் அடியார்கள் அனைவரும் பெருமானை நல்லவர் என்று போற்ற. அவனுடன் பகைமை கொண்டோர் பெருமான் தங்களைத் துன்புறுத்துவதை கருத்தினில் கொண்டு முதலில் பெருமானை தீயவர் என்று கூறினாலும், பின்னர் பெருமான் மறக்கருணை மூலம் தங்களுக்கு நல்லவையே செய்தார் என்று உணர்ந்து போற்றுகின்றனர். இவ்வாறு அனைவராலும் போற்றப்படும் தன்மையை உடைய பெருமான் பந்தனைநல்லூர் தலத்தில் பசுபதியாக வீற்றிருக்கின்றான்.