126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 3
பெருமானை வழிபடத்
பாடல் 3:
பாடினை அருமறை வரன் முறையால்
ஆடினை காண முன் அருவனத்தில்
சாடினை காலனைத் தயங்கொளி சேர்
நீடு வெண்பிறை முடி நின்மலனே
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலிந்நகர்
தனியே இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே
விளக்கம்:
Advertisement
தனக்கு இறைவன் ஞானம் தந்ததை பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர் தவநெறியும் தர வேண்டும் என்று இந்த பாடலில் வேண்டுகின்றார். திருஞானசம்பந்தர் தவநெறி வேண்டுவது நமக்கு, சுந்தரர் தவநெறி வேண்டியதை நினைவூட்டுகின்றது. சுந்தரர் தவநெறி வேண்டியதை குறிப்படும் சேக்கிழார், தீவினைப் பயனால் அவநெறியில் செல்லாமல் தன்னை தடுத்தாட்கொண்ட இறைவன், தனக்கு தவநெறி தந்தருள வேண்டும் என்று சுந்தரர் வேண்டியதாக கூறுகின்றார். தவநெறி=சிவபூஜையில் செல்லும் வழி. புலன் வழிச் செல்லாது மனத்தினை ஒன்றுவித்து சிவபெருமானை இடைவிடாது நினைத்தலும் பூசித்தலுமே தவநெறி எனப்படும் என்று பெரியோர்கள் விளக்கம் கூறுவார்கள். எனவே புலன்களின் வழியே செல்லும் வாழ்க்கையை அவநெறி என்று உணர்த்தினார் என்று கொள்வதும் பொருத்தமே. பெருமான் சுந்தரரை ஆட்கொண்டபோது சுந்தரர் திருமணம் செய்து கொண்டு உலகத்தவர் அனைவரும் செல்லும் இல்லற வழி தானே. எனவே அவர் அப்போது செல்லவிருந்தது தீவினை என்று குறிப்பிடுவது தவறு அல்லவா. எனவே தீவினை என்று சேக்கிழார் இங்கே கூறுவது தீயின் முன்னர் செய்யப்பட்டு மணவேள்வி என்று பொருள் கொள்ளவேண்டும். தவநெறி அல்லாத வாழ்க்கை என்பதால் அவநெறி என்று குறிப்பிட்டார் எனவும் பொருள் கொள்ளலாம்.
சிவன் உறையும் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால்
அவநெறியில் செல்லாமே தடுத்தாட்கொண்டாய் அடியேற்கு
தவநெறி தந்து அருள் என்று தம்பிரான் முன்னின்று
பவநெறிக்கு விலக்காகும் திருப்பதிகம் பாடினார்
நினையே தொழ=உன் ஒருவனை மட்டும் தொழும்; ஏகாரம் பெருமானை மட்டுமே என்று குறிப்பிடப் பயன்படுத்தப் பட்டுள்ளது வரன்முறை=வரைமுறை; சந்த இலக்கணங்களுடன் பாட வேண்டிய உயர்ந்த முறை; அருவனம்=அரிய வனம், தாருகவனம்; தாருகவனத்து முனிவர்கள் அனைவரும், பெருமானின் தன்மையை உணர்ந்து கொண்ட பின்னர், அதுவரை தாங்கள் கொண்டிருந்த கொள்கையில் இருந்த தவறினை உணர்ந்து, பெருமானை வழிபடத் தொடங்கினர். அது கண்ட பெருமான் மிகுந்த மகிழ்ச்சியுடன், பல வகையான நடனங்கள் ஆடினார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த நடனங்களை தாருகவனத்து முனிகளும் அவரது மனைவியர்களும் தேவர்களும் கண்டு களித்தமை இங்கே அருவனத்தில் காண ஆடினை என்ற தொடரால் சொல்லப் படுகின்றது. தயங்கொளி=விளங்கும் ஒளி; நீடுவெண் பிறை=நீண்ட பிறைச் சந்திரன்; தக்கனின் சாபத்தால் தனது கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து தனது ஒளியினை இழந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில், சந்திரன் பெருமானிடம் சரண் அடைந்தான். பெருமான், தன்னிடம் சரணடைந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொள்ள, நின்மலன்=இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன். பெருமானின் எட்டு அரிய குணங்களில் ஒன்று
பொழிப்புரை:
பெருமானே, அரிய மறைகளை வரைமுறை கெடாமல் நீ பாடுகின்றாய்; மேலும் தனிச் சிறப்பு வாய்ந்த தாருகவனத்தில், முனிவர்களும் அவர்களது மனைவியரும் தேவர்களும் கண்டு மகிழும் வண்ணம் சிறந்த பல நடனங்களை நீ ஆடினாய்; உனது அடியானாகிய மார்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலன் மீது கோபம் கொண்டு அவனை உதைத்து வீழ்த்தினாய்; ஒளியிழந்து தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையினில் சரணடைந்த, பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்து கொண்டு சத்திரனுக்கு மறுவாழ்வு அளித்து, அவனது வாழ்நாளை நீட்டி ஒளியுடன் வானில் திகழும் வண்ணம் அருள் புரிந்தாய்; உனது பெருமையை நன்கு உணர்ந்த உனது அடியார்கள், மற்ற தெய்வங்களைத் தொழுவதை தவிர்த்து உன்னையே தொழும் வண்ணம், நீண்டு உயர்ந்த மதிற்சுவர்கள் கொண்ட புகலி நகரினை உனது இருப்பிடமாகக் கொண்டு அங்கே நீ உறைகின்றாய்; இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கிய பெருமானே நீ அடியேனுக்கு தவநெறி தந்து அருள் புரிவாயாக.