முகப்பு
தினம் ஒரு தேவாரம்

126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 4

பெருமானின் திருமுடியையும்

Updated On : 13 ஏப்ரல், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:09 PM


பாடல் 4:

    நிழல் திகழ் மழுவினை யானையின் தோல்
    அழல் திகழ் மேனியில் அணிந்தவனே
    கழல் திகழ் சிலம்பொலி அலம்ப நல்ல
    முழவொடும் அருநடம் முயற்றினனே
    முடிமேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி
    அடியார் அவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே 

விளக்கம்:

Advertisement

நிழல்=ஒளி; முருகு=நறுமணம்; அலம்ப=ஆரவாரத்துடன் ஒலிக்க; இந்த பாடலில் கழலும் சிலம்பும் குறிப்பிடப்பட்டு மாதொரு பாகனாக இறைவன் உள்ள நிலை உணர்த்தப் படுகின்றது. அழல் திகழ்=கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்று சிவந்த வண்ணம்; தீமேனியான் என்று பல பாடல்களில் பெருமானை அழைத்து நால்வரும் மகிழ்கின்றனர். கோத்தும்பீ பதிகத்தின் கடைப் பாடலில் தீமேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ என்று மணிவாசகர் பாடும் பாடலை நாம் இங்கே காண்போம். நடனம் ஆடுபவனுக்கும் பாடும் கலைஞனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இயற்கையே. அந்த தொடர்பினை பயன்படுத்தி, தனது விருப்பத்தை தூதுவனாக சென்று பெருமானிடம் தெரிவிக்க, வண்டுகளின் அரசனை மணிவாசகர் தேர்ந்து எடுக்கின்றார். தனக்கு இறைவன் அளித்த பெருமையை நினைத்து பெருமிதம் கொண்டு இறுமாந்து இருந்ததாக இங்கே கூறுகின்றார். தங்களது ஆற்றலில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாய், பெருமானின் திருமுடியையும் திருவடிகளையும் தேடிச் சென்ற பிரமனும் திருமாலும் தங்கள் முயற்சியில் தோல்வியுற்று திகைத்து நின்றதை ஏமாறி நின்றது என்று அடிகளார் குறிப்பிடுகின்றார். தவிசு=ஆசனம்; வீட்டின் நடுவில் ஒரு ஆசனம் வைத்து நாயினை அழைத்து அதில் உட்காரும் வண்ணம் எவரேனும் செய்வாரோ. வீட்டினில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும், நாம் அந்த நாயினை அதன் போக்கில் விட்டுவிடுவோம் அல்லவா. இது நாயின் தகுதி கருதி நாம் செய்யும் செயல். அவ்வாறு இருக்க, நாய் போன்று கீழ்நிலையில் இருந்த தன்னை, இறைவன் ஒரு பொருட்டாக மதித்து திருவடி தீட்சை அளித்த நிகழ்ச்சியை நன்றாய் பொருட்படுத்த என்ற தொடர்  மூலம் அடிகளார் உணர்த்துகின்றார்.      .        
    பூமேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று
    ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
    நாய் மேல் தவிசு இட்டு நன்றாய் பொருட்படுத்த
    தீ மேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ 

பொழிப்புரை:

ஒளி வீசும் மழுப்படையைத் கையில் ஏந்திய பெருமானே, தன்னை எதிர்த்து வந்த மத யானையின் தோலினை உரித்து கொழுத்து விட்டெரியும் தீ போன்ற நிறத்தில் அமைந்த தனது திருமேனியின் மீது போர்த்தவனே, ஆரவாரத்துடன் ஒலிக்கும் சிலம்பினையும் அழகாக திகழும் கழலையும் கால்களில் அணிந்தானே, பூத கணங்கள் முழவினை இயக்க அந்த இசையின் பின்னணியில் நடனம் ஆடுபவனே, சடையில் பிறைச் சந்திரனை சூடிய பெருமானே, நீ நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்த புகலி நகரினில் அடியார்கள் உன்னை புகழ்ந்து ஏத்த, அழகான திருக்கோலத்துடன் அமைந்துள்ளாய்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.