126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 8
ஆண்களில் சிறந்தவனாக கருதப்படுபவனே
பாடல் 8:
இரவொடு பகலதாம் எம்மான் உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன் வழி அடியேன்
குரவிரி நறும் கொன்றை கொண்டு அணிந்த
அரவிரி சடைமுடி ஆண் தகையே
அன மென்னடையாளொடும் அதிர்கடல் இலங்கை மன்னை
இனமார் தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே
விளக்கம்:
Advertisement
இரவொடு பகலதாய்=இரவும் பகலாகவும் வெவ்வேறு காலங்களாக இருப்பவனே; வழியடியேன்=இதுவரை எடுத்த அனைத்து பிறப்புகளிலும் வழிவழியாக; குர=குராமலர்; இனமார்=கூட்டமாக அமைந்துள்ள;
பொழிப்புரை:
இரவாகவும் பகலாகவும் ஒரு நாளின் அனைத்துப் பொழுதுகளாகவும் இருக்கும் பெருமானே கடந்து பல பிறவிகளாக வழிவழியாக உன்னைப் புகழ்ந்து வழிபட்டுவந்த அடியேன் அந்த பழக்கத்திலிருந்து விடுபடாமல் உன்னைத் தொடர்ந்து வழிபடுவேன்; குரா மலரும் நறுமணம் வீசும் கொன்றை மலரினையும் தனது விரிந்த சடையில் அணிந்து கொண்டுள்ள பெருமானே, ஆண்களில் சிறந்தவனாக கருதப்படுபவனே, அதிரும் கடலினை எல்லையாகக் கொண்டுள்ள இலங்கைத் தீவினுக்கு அரசனாக விளங்கும் இராவணனின், கூட்டமாக விளங்கிய இருபது தோள்களையும் மலையின் கீழே அடர்த்து நெருக்கியவனே, அன்னத்தைப் போன்று அழகு நடையினை உடைய உமை அன்னையுடன் அமர்ந்தவனாக நீ புகலி நகரில் காட்சி தருகின்றாய்.