127. பிறையணி படர்சடை - பாடல் 8
கடலின் கருமை
பாடல் 8:
கடலென நிற நெடு முடியவன் அடு திறல் தெற அடி சரணென
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை
விடநிறை மிடறு உடையவன் விரி சடையவன் விடை உடையவன் உமை
உடனுறை பதி கடல் மறுகுடை உயர் கழுமல வியன் நகரதே
விளக்கம்:
Advertisement
அடுதல்=அழித்தல், வருத்துதல்; அடுதிறல்=பிறரை வருத்தும் வலிமை; தெற=தொலையும் வண்ணம்; அடல்=வலிமை;
பொழிப்புரை:
கடலின் கருமை நிறம் கொண்டவனும் நீண்ட முடிகளை உடையவனும் ஆகிய அரக்கன் இராவணனின், பிறரை வருத்தும் வலிமை தொலையும் வண்ணம் அவனை கயிலை மலையின் கீழே அழுத்தி நெருக்கியவன் சிவபெருமான். அவ்வாறு அழுத்தப்பட்டதால் தனது உடல் வலிமை குன்றிய நிலையில் அரக்கன் இராவணன் பெருமானின் திருவடிகளை சரணடைய, அவனுக்கு பரிசாக வல்லமை வாய்ந்த படைக்கலங்களை அருளியவன் சிவபெருமான்; அனைவரும் புகழத் தக்க வகையில் விடமுடைய பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், ஒளி வீசும் கதிர்களை உடைய பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனும், விடத்தினை தேக்கியதால் கருமை நிறம் அடைந்த கழுத்தினை உடையவனும், விரிந்த சடையை உடையவனும், இடபத்தை வாகனமாக உடையவனும் ஆகிய பெருமான், உமையம்மையுடன் உறைவது கழுமலம் நகரமாகும். அத்தகைய பெருமை வாய்ந்த கழுமலம் நகரம், பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்து னித்து உலகத்தினையும் மூழ்கடித்த போதிலும். தான் மூழ்காத வண்ணம் உயர்ந்து நின்ற தலமாகும்.