முகப்பு
தினம் ஒரு தேவாரம்

127. பிறையணி படர்சடை - பாடல் 9

மூவுலகங்களையும் அளந்த திருமாலும்

Updated On : 29 ஏப்ரல், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:18 PM

பாடல் 9:

    கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன்
    விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழிலணி விழவமர்
    கழுமலம் அமர் கனல் உருவினன் அடியிணை தொழும் அவர் அருவினை
    எழுமையும் இல நிலவகை தனில் எளிது இமையவர் வியனுலகமே

விளக்கம்:

Advertisement

கொழு=அழகு; அவன்=சிவபெருமான்; விழுமை=பெருமை. சிறப்பு; இறை என்ற சொல்லினை அளவு அறிகிலர் என்ற சொற்களுடன் முன்னர் வைத்து பொருள் காண வேண்டும். இறை அளவு அறிகிலர்=சிறிதும் அறியாமல்; விரை=நறுமணம்; புணர்=கலந்த;

பொழிப்புரை:

சிறந்த தாமரை மலரினைத் தனது இருப்பிடமாக உடைய பிரமனும், நெடியவனாக வளர்ந்து மூவுலகங்களையும் அளந்த திருமாலும் ஆகிய இருவரும், பெருமானின் சிறப்பினையும் பெருமையினையும் சிறிதளவும் அறியாததால், அவனது திருமுடியையும் திருவடிகளையும் காண்பதற்கு முயற்சி செய்து, அவற்றை காண முடியாமல் திகைத்தனர்;  நறுமணம் கலந்த அழகிய சோலைகள் சூழ்ந்ததும், திருவிழாக்கள் இடைவிடாது நடைபெறுவதும் ஆகிய கழுமலம் நகரினில் உறைபவனாகிய பெருமானின் இணையான இரண்டு திருவடிகளை வணங்கும் அடியார்கள், வல்லமை வாய்ந்த வினைகளால் ஏற்படும் ஏழு வகையான பிறப்புகளில் ஏதும் அவர்களை அணுகாது. எனவே அவர்கள் மீண்டும் நிலவுலகில் பிறவாமல் இமையவர் உலகினை அடையும் தன்மையை மிகவும் எளிதில் பெறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.