131. அருத்தனை அறவனை - பாடல் 2
வளமான கடைமுடி தலமாகும்
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:37 PM
பாடல் 2:
திரை பொரு திருமுடி திங்கள் விம்மும்
அரை பொரு புலியதள் அடிகள் இடம்
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்
கரை பொரு வளநகர் கடைமுடியே
விளக்கம்:
திரை=அலைகள்; பொருதல்=மோதுதல், பொருந்துதல்; விம்மும்=பெருகுதல்; திருக்கோயிலுக்கு தெற்கே சுமார் அரை கி.மீ. தொலைவில் காவிரிநதி ஓடுகின்றது.
Advertisement
பொழிப்புரை:
கங்கை நதியின் நீரலைகள் மோதும் சடைமுடியினில், நாளும் ஒளி பெருகும் பிறைச் சந்திரனை உடையவரும், தனது இடுப்பினில் புலித்தோல் ஆடை பொருந்தியவரும் ஆகிய இறைவன் உறையும் இடமாவது, வளமான கடைமுடி தலமாகும், நுரைகள் பெருகியும் தெளிந்த நீரினைக் கொண்டுள்ள நீரலைகள் கரையினில் மோதும் தன்மையால் இந்த தலம் நீர்வளத்துடன் காணப்படுகின்றது.