131. அருத்தனை அறவனை - பாடல் 3
சனகாதி முனிவர்கள்
பாடல் 3:
ஆல் இளமதியினொடு அரவு கங்கை
கோல வெண்ணீற்றனைத் தொழுது இறைஞ்சி
ஏல நன் மலரொடு விரை கமழும்
காலன வளநகர் கடைமுடியே
விளக்கம்:
Advertisement
காலன்=காலை உடையவன்; பெருமானின் திருவடி, நறுமணம் மிகுந்த மலர்கள் சாத்தப்பட்டு மணத்துடன் கமழும் நிலை இங்கே குறிக்கப்பட்டுள்ளது. ஏலம்=நறுமணம் விரை=வாசனை; பெருமானை வணங்கும் அடியார்கள் மலர்கள் தூவியும் தூபதீபம் காட்டியும் பெருமானை இந்த தலத்தில் வழிபட்டனர் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. ஆல்=கல்லால மரத்தின் நீழல்; கோல=அழகிய;
பொழிப்புரை:
கல்லால மரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் அறம் உறைத்தவரும், ஒற்றைப் பிறைச் சந்திரனுடன் பாம்பு மற்றும் கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டவரும், அழகிய வெண்ணீற்றை உடலெங்கும் பூசியவரும் ஆகிய இறைவனை அடியார்கள் நறுமணம் மிகுந்த மலர்களை அவரது திருவடிகளில் தூவியும், வாசனை வீசும் தூபங்கள் காட்டியும் தொழுதும் வணங்குகின்றனர். இவ்வாறு அடியார்கள் தொழுவதால் நறுமணம் கமழும் திருவடிகளைக் கொண்டுள்ள இறைவன் உறைவது கடைமுடி எனப்படும் தலமாகும்.