131. அருத்தனை அறவனை - பாடல் 4
கொன்றை மலர்
பாடல் 4:
கொய்யணி நறுமலர்க் கொன்றை அந்தார்
மையணி மிடறு உடை மறையவன் ஊர்
பை அணி அரவொடு மான் மழுவாள்
கை அணிபவன் இடம் கடைமுடியே
விளக்கம்:
Advertisement
மை=மை போன்று கரிய நிறம் கொண்ட ஆலகால விடம்; பை=பாம்பின் படம்; கொய்யணி= அப்போது தான் கொய்யப்பட்ட; கொய்தல்=பறித்தல்;
பொழிப்புரை:
அப்போது தான் பறிக்கப்பட்ட, நறுமணம் வீசும் கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், மை போன்று கரிய நிறம் கொண்டிருந்த ஆலகால விடத்தினை அருந்திய பின்னர் அதனைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்டு விளங்கும் கழுத்தினை உடையவனும், வேதத்தின் பொருளாக உள்ளவனும், ஆகிய இறைவன் உறையும் ஊர் யாது என்று நீர் அறிந்து கொள்ள விரும்பினால் கேட்பீராக; படம் எடுத்து ஆடுவதும் கொடிய விடத்தினை உடையதும் ஆகிய பாம்பினை கங்கணமாக அணிந்து கொண்டுள்ள கையினில் மானினையும் மழுவினையும் ஏற்றுக் கொண்டுள்ள இறைவன் உறையும் இடம் கடைமுடி தலமாகும்.