முகப்பு
தினம் ஒரு தேவாரம்

131. அருத்தனை அறவனை - பாடல் 9

மும்மூர்த்திகளில் ஒருவராக

Updated On : 12 ஜூன், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:37 PM


பாடல் 9:

    அடிமுடி காண்கிலர் ஓர் இருவர்
    புடை புல்கி அருள் என்று போற்றி இசைப்பச்
    சடையிடைப் புனல் வைத்த சதுரன் இடம்
    கடை முடி அதன் அயல் காவிரியே  

விளக்கம்:

Advertisement

சதுரன்=சாமர்த்தியம் மிகுந்தவன்; வியத்தகு திறமை உடையவன்; புடைபுல்கி=அணுகி அருகில் சென்று; தங்களது செருக்குற்ற நிலையிலிருந்து விலகி அன்பினால் இறைவனை அணுகி அருகில் சென்று; மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப் படும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் திகைத்து நிற்க, நீண்ட நெடுந்தழலாக இறைவன் நின்றதும், மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த அகன்ற நீர்ப்பரப்பினைக் கொண்ட கங்கை நதியினை சடையில் தேக்கி வைத்ததும், வியத்தகு செயல்கள் அல்லவா. எனவே சதுரன் என்று மிகவும் பொருத்தமாக இறைவனை சம்பந்தர் இங்கே அழைக்கின்றார்.        

பொழிப்புரை:

தங்களது வலிமையின் மீது செருக்கு கொண்டு, நீண்ட தழலாய் நின்ற இறைவனின் திருவடியை திருமுடியை கண்டு விடுவோம் என்று முயற்சி செய்த திருமாலும் பிரமனும், தங்களது முயற்சி வீணான பின்னர் பெருமானின் வலிமையை உணர்ந்து, அன்புடன் அவரை அணுகி அவரது அருகில் சென்று அருள் புரிவாய் என்று இறைஞ்சி அவனைப் போற்றி இசைத்து நின்றனர். இவ்வாறு இருவரினும் உயர்ந்து நிற்பவன் தான், என்று உலகுக்கும் அவரகள் இருவருக்கும் உணர்த்திய இறைவன், தனது சடையின் இடையே கங்கை நதியைத் தேக்கி வைத்த திறமையாளன் ஆவான். அத்தகைய சதுரன் உறையும் இடமாகிய கடைமுடி தலத்தின் அருகே  காவிரியாறு ஓடுகின்றது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.