முகப்பு
தினம் ஒரு தேவாரம்

132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 5

சூரியன் சந்திரன் மற்றும் அக்னி

Updated On : 19 ஜூன், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:46 PM

பாடல் 5:

    கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடியாகப்
    பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம்
    வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
    போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

Advertisement

போதம்=ஞானம்; கீதம்=இனிய இசையுடன் கூடிய பாடல்கள்; குடி=புகலிடம்; பரஞ்சோதி= உயர்ந்த சோதி; பெருமான் சூரியன் சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்று சுடர்களுடன் உடன் இருந்து அந்த சுடர்களுக்கு ஒளி கொடுக்கும் ஈசன், தானே ஒளிவிடும் சோதியாகவும் உள்ளான். அவ்வாறு ஒளிவீசும் சோதியாக விளங்கும் ஈசனுக்கு ஒளி கொடுப்பவர் எவரும் இல்லை என்பதால், உயர்ந்த சோதி என்ற பொருளைத் தரும் வண்ணம் பரஞ்சோதி என்று இங்கே குறிப்பிடுகின்றார். பயிலும்=தொடர்ந்து இந்த தலத்தில் உறையும் நிலை; மண்ணி ஆற்றின் கரையில் இருந்த வெண்மணலில் இலிங்கம் செய்து வழிபட்டவர் சண்டீசர். தான் கண்ட அனைத்துப் பொருட்களிலும் சிவத்தை காணும் ஞானம் பெற்றவர் அப்பர் பிரான்.  அவ்வாறே வெண்மணலில் சிவபெருமானின் உருவத்தைக் கண்ட ஞானம் உடையவர்களாக ஜடாயுவும் சம்பாதியும் திகழ்ந்தனர் என்று சம்பந்தர் கூறுகின்றார்.       

பொழிப்புரை:

இனிய இசையுடன் கூடிய பாடல்களை பாடும் அடியார்கள், தங்களது புகலிடம் என்று பெருமானின் திருவடிகளை கருதி, அவற்றைத் தொழுது வணங்கும் வண்ணம், எந்நாளும் உயர்ந்த சோதியாகிய பெருமான் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும். தாங்கள் பெற்றிருந்த ஞானத்தின் உதவி கொண்டு வெண்மணலை சிவமாக பாவிக்கும் தன்மை பெற்றிருந்த ஜடாயுவும் சம்பாதியும், வேத மந்திரங்களை சொல்லி பெருமானை வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.